எதிர்பாராதது

எதிர்பாராதது

அ.முத்துலிங்கம்

ஒரு பிரபலத்தை நேர்காணல் செய்வதற்கு எனக்கு ஒரு வருடகாலம்கூட அலையவேண்டி இருந்திருக்கிறது. என் வாழ்க்கையில் பலரை நேர்காணல் செய்திருக்கிறேன். பிரபல எழுத்தாளர்கள், நடிகர்கள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், இயக்குநர்கள், பாடகர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் இலகுவில் நேரத்தை ஒதுக்கித் தரமாட்டார்கள். தட்டிக் கழிக்கவே செய்வார்கள். ஆனால் சமீபத்தில் எனக்கு ஒரு சின்ன அதிர்ஷ்டம் அடித்தது. நான் தேடிப்போகாமல் அதுவாகவே என்னிடம் வந்தது. நான் கனவிலும் எதிர்பாராத ஓர் உலகப் பிரபலமான நடிகருடன்  பத்து நிமிடம் பேசும் வாய்ப்பு. துயரம் என்னவென்றால் என்னால் நேர்காணலுக்கு தயாராக முடியவில்லை. அது தற்செயலாக நடந்தது.

பஸ் புறப்பட்டுவிட்டது. நான் கடைசி ஆசனத்தில் உட்கார்ந்தேன். அது ஒன்றுதான் இருந்தது, மீதி எல்லாம் நிரம்பிவிட்டது.  இனி ஒருவரும் ஏறப்போவதில்லை, ஏறினாலும் இடமில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தபோது ஓடிய பஸ் திடீரென்று நின்று கதவு திறந்தது. இரவு மணி ஒன்பது ஆனாலும் கோடைகாலம் என்பதால் அமெரிக்காவின் சியாட்டில் நகரத்து சூரியன் முழுதும் மறையாமல் தயக்கம் காட்டியபடியே நின்றான். பஸ்ஸினுள் பாதி இருள் பாதி வெளிச்சம். கையிலே மதுக்கிண்ணத்தை ஏந்தியபடி உயரமான ஓர் உருவம் ஏறி ஒவ்வொரு இருக்கையாகப் பார்த்தபடி கடைசி ஆசனத்துக்கு வந்தது. நான் என்னைச் சுருக்கி இடம் விட்டேன். வந்தவர் என்னை நெருக்கிக்கொண்டு உட்கார்ந்து நன்றி என்றார்.

அவர் வேறு யாரும் அல்ல. பிரபல நடிகர் ஹாரிசன் ஃபோர்ட்.   ஸ்டார் வார்ஸ் படத்தில்  நடித்து புகழ் பெற்றவர். இவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த  இன்னொரு  படமான இண்டியானா ஜோன்ஸ்  இலங்கையில் கண்டி நகரத்தில் படம்பிடிக்கப்பட்டது. இந்தி நடிகர் அம்ரிஷ்  பூரி அதில் நடித்திருப்பார். இவர் நடித்த படங்களில்  எனக்குப் பிடித்தது என்றால் அது  Air Force One  தான். அமெரிக்க ஜனாதிபதியாக நடித்திருப்பார். ரஸ்யாவுக்கு போய்விட்டு திரும்பும்போது அவருடைய விமானம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு விடுகிறது. முன்னாள் ராணுவவீரரான ஜனாதிபதி கடத்தல்காரர்களுடன் போராடி வெற்றியீட்டும் கதை.

அன்று மதியம் நடந்த விருந்தில் கலந்து கொண்டிருந்தபோது என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார்கள். என்ன பேசுவது? ’நீங்கள் நடித்த படம் பார்த்தேன். உங்கள் நடிப்பு அமோகமாயிருந்தது’ அப்படிச் சொல்வதா? நான்ஒன்றுமே பேசவில்லை. பிரபலமில்லாதவர்களுடன் சம்பாசணை தொடங்குவது எளிதானது. எனக்குப் பக்கத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். வயது 30 – 35 இருக்கும். சாதுவான முகம். தன் நீண்ட தலைமுடியை பாம்புபோல வட்டம் வட்டமாகச் சுருட்டி தலைக்குமேல் வைத்திருந்தார். ஏதாவது பேசவேண்டுமே என்று ’என்ன செய்கிறீர்கள்?’ என்று சாதாரணமாக கேட்டு வைத்தேன். அவரும் சாதாரணமாகவே பதில் சொன்னார்.  ’இசை ஞானம் உள்ளவர்கள் சிலர் வசதிக் குறைவால் தங்கள் இசையை குறுந்தகடாக வெளியிட முடியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுகிறேன்’ என்றார். ’நல்ல பணி’ என்றேன்.

பின்புதான் தெரிந்தது அந்த இளைஞர் ஒரு பில்லியனர் என்று. விருந்துக்கு இன்னொரு மாநிலத்திலிருந்து சொந்த விமானத்தில் வந்திருந்தார். என் பக்கதில் உட்கார்ந்திருந்த இன்னொருவர், 30 வருடத்துக்கு மேல் ஆப்பிரிக்காவில் எனக்குப் பழக்கமானவர், சொன்னார் இப்படியான விருந்துகளில் ’நீங்கள்என்ன செய்கிறீர்கள்’ என்று கேட்கக்கூடாது. அப்படிக் கேட்டால் அவர்கள் அன்று காலை செய்ததைத்தான் சொல்வார்கள். நீங்கள் என்ன துறையில்  ஈடுபட்டிருக்கிறீர்கள் என்று கேட்கவேண்டும். இவர்கள் பணம் சம்பாதிப்பது எப்படி என்று சிந்திப்பதை நிறுத்திவிட்டார்கள். ஏற்கனவே சம்பாதித்ததை  என்ன அறக்கட்டளைக்கு, எப்போது,  எவ்வளவு கொடுக்கவேண்டும் என்பதை திட்டமிடுவதிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள்.

ஆகவே பஸ்ஸிலே பக்கத்தில் அமர்ந்த ஹாரிசனிடம் எப்படி சம்பாசணையை ஆரம்பிப்பது என்று யோசித்தேன்.  அந்தப் பிரச்சினையை அவரே தீர்த்தார்.  மதுவை ஒரு மிடறு விழுங்கிவிட்டு ’நீங்கள் கனடாவிலிருந்து வந்திருக்கிறீர்கள். இல்லையா?’ என்றார். மதிய விருந்தில் சந்தித்ததை ஞாபகம் வைத்திருக்கிறார். ‘நான் கனடாவில் ஒரு படம் நடித்திருக்கிறேன். ஆனால் பெயர் மறந்துவிட்டது’ என்றார். ’நீர்மூழ்கிக் கப்பல் படமா?’ என்றேன். ஆமாம் என தலையாட்டினார். அவர் ஒரு ரஸ்ய நீர்மூழ்கிக் கப்பல் காப்டனாக நடித்திருந்தார். படம் முழுக்க கடலுக்கு அடியில் நடந்தாலும் விறுவிறுப்புக்கு  குறைவில்லை. ’படத்தின் பெயர் K19’  என்றேன். அவர் ஆமாம் என்றபடி இன்னொரு மிடறு குடித்தார்.

’உங்கள் சுயசரிதையை எழுதும் திட்டம் ஏதாவது உண்டா?’ என்றேன். ‘சுயசரிதையா? நானா? ஏன் எழுதவேண்டும்?’ ’உங்கள் கதை சுவாரஸ்யமானது.  மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இரு க்கும்.’ ’எப்படி சொல்கிறீர்கள்?’ ’நடிக்க வாய்ப்புத் தேடி நீங்கள் அலைந்திருக்கிறீர்கள் என்று படித்திருக்கிறேன். உங்களுக்கு கிடைத்த அநேகமான வாய்ப்புகள் தற்செயலானவை. அது பற்றி எழுதலாமே?’

’வாழ்க்கையில் எல்லாமே தற்செயலாக நடப்பவைதான். நீங்கள் யாருடைய வாழ்க்கையை எடுத்துப்பார்த்தாலும் அப்படித்தான் இருக்கும். திட்டமிட்டு அதன்படி வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் இந்த உலகில் யாருமே இல்லை.’

’உங்கள் வாழ்க்கையை பதிவு செய்வதில் அப்படி என்ன பிரச்சினை?’

’என் வாழ்க்கையை நான் பதிவு செய்யக்கூடாது. அதை மற்றவர்கள் செய்யவேண்டும். அப்பொழுதுதான் அது உண்மையாக இருக்கும். சுயசரிதை எழுதுபவர்கள் தங்கள் உண்மை வாழ்க்கையை மறைக்கத்தான் எழுதுகிறார்கள்.’

’நீங்கள் ஸ்டீபன் ஸ்பீல்பேர்க் இயக்கத்திலும் நடித்திருக்கிறீர்கள். ஜோர்ஜ் லூகாஸுடன் ஆரம்பத்திலிருந்து வேலை பார்த்திருக்கிறீர்கள். அவர்களுடனான உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?’

அவர் பதில் சொல்ல முன்னர், பஸ்ஸின் முன் இருக்கையிலிருந்து ஓர் இளைஞன் எழுந்து எங்களை நோக்கி நடந்து வந்தான். அவன் ஹாரிசனைப் பார்த்து ’உங்கள் டிரிங்கில் கொஞ்சம் தரமுடியுமா?’ என்று கேட்டான். நான் திடுக்கிட்டு ஹாரிசனை திரும்பிப் பார்த்தேன். அவர் ’தாராளமாக’ என்று சொல்லிக்கொண்டே தன் கிளாசை நீட்டினார். அந்த இளைஞன்  அதை வாங்கி ஒரு வாய் குடித்துவிட்டு கிளாஸை திரும்பவும் கொடுத்தான்.

ஹாரிஸன் என் கேள்வியை மறக்காமல் தொடர்ந்தார். ’நான் நடிக்க வந்ததே எதிர்பாராத ஒன்று. நானாகவே தச்சு வேலை கற்று என் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருந்தேன். ஜோர்ஜ் லூகாஸின் ஸ்டார் வார்ஸ் படத்தில் நடிகர்களுக்கு வசனம் பேசக் கற்றுக் கொடுத்தேன். என்னை நடிக்கச் சொன்னார்கள். அவர்கள் சொல்லித் தந்ததை அப்படியே நடிப்பதுதான் என் வேலை. ஒவ்வொருவரிடமும் நிறையக் கற்றிருக்கிறேன். இவர்தான் உயர்வு என்று சொல்வதற்கு எனக்கு ஒருவரும் இல்லை. நடித்து முடிந்த பின்னர் அதைப்பற்றி எல்லாம் யோசிப்பதே இல்லை. உடனேயே மறந்துவிடுவேன்.’

இப்படிக் கதைத்துக்கொண்டு வந்தபோது நான் தங்கும் ஹொட்டல் வந்துவிட்டது. நான் விடை பெற்றேன். என்னை இறக்கிவிட்டு போன பஸ்ஸில் அவர் போனார். யாரோ பயணி குடித்து மிச்சம்விட்ட மதுக் கிளாசும் அவருடன் போனது.

END

About the author

2 comments

  • பேட்டி கண்டதும் தற்செயலே! திட்டமிட்ட பேட்டியைவிட நன்றாகவே அமைந்தது.எச்சில் கிளாஸ் பழக்கம்.கொரோனா தொற்றாமல் என்ன செய்யும்?

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta