நான் ஸ்கூலில் இருந்து திரும்பியபோது அது நடந்தது. அத்தனை சாதாரணமாவும் நிதானமாகவும் நடந்து முடிந்தது எனக்கே ஆச்சரியம்தான். மயிர் அடர்ந்த வலிமையான கரம் என்னைப் பற்றி இழுத்தது. மரக்குத்தி போல இருந்த மற்றக்கை என் வாயை பொத்தியது. என் கண்களில் தோன்றிய பீதியை பார்த்துவிட்டு அவன் கையை எடுத்திருக்கவேண்டும். பூவரச மரம் ஒன்றுக்கு பக்கத்தில் என்னைக் கிடத்தினான். தோள் மூட்டை அவன் அழுத்திப் பிடித்ததில் எலும்புகள் முறிந்துவிட்டன என்றே முதலில் நினைத்தேன். பள்ளிக்கூடச் சீருடையை சீரில்லாமல் ஆக்கினான். என்னுடைய நோவுகளில் என்னால் தாங்க முடியாமல் இருந்தது பின் தோள் எலும்புக்கு கீழ் மாட்டிய கூரான கல்தான். அவன் உடம்பிலிருந்து தாங்கமுடியாத சிமெந்து வாசனை வந்தது.
எல்லாம் முடிந்தபின் என் தலையை வருடி நான் முன்பு இருந்ததுபோல என்னை ஆக்கினான். இரட்டைப் பின்னலை எடுத்து நெஞ்சுக்கு முன்னால் விட்டான். கன்னத்தை தடவி, புண்போல இருந்த தன்னுடைய உதட்டினால் என் நெற்றியிலே ஒரு முத்தம் வைத்தான். இரண்டு நிமிட நேரத்தில் அந்த ஒரு செய்கையில்தான் கொஞ்சம் அன்பு தெரிந்தது. அவன் என்ன செய்தான் என்பதற்கான வார்த்தை எனக்கு தெரியாது. அம்மாவோ ஆசிரியையோ இன்னும் சொல்லித்தரவில்லை. தனியே விடப்பட்ட நான் நடுங்கியபடி ஈரமாகிவிட்ட ஜங்கியை எடுத்து மாட்டப் பார்த்தேன். பின்னர் ஞாபகச் சின்னமாக அதை அங்கேயே விட்டுவிட்டு வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன். அந்த நாளிலிருந்து நான் ஜங்கி அணிவதை நிறுத்தினேன். அதற்கு இனி என்ன வேலை? ஜங்கிகளுக்கு என்ன ஆமைப்பூட்டா போட்டு விற்கிறார்கள்?
