ஓணானுக்கு பிறந்தவன்

ஓணானுக்கு பிறந்தவன்
 
                      அ.முத்துலிங்கம்
 
அவனைப் பிடித்துவிட்டார்கள். கிரேக்க தேசத்தின் பாட்ரா எல்லையில் இரவு இரண்டு மணிக்கு. அவன் நின்ற இடம் இதற்கு முன்னர் லட்சக்கணக்கான பயணிகள் நின்று நின்று பள்ளம் விழுந்து தேய்ந்து கிடந்தது. அவன் உயரம்கூட ஓர் அங்குலம் குறைந்தே காணப்பட்டது. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு வருடங்களில் பல தடவை பிடிபட்டிருக்கிறான். அன்று பிடிபடுவோம் என்று நினைக்கவில்லை.. அவனுடைய கடவுச்சீட்டும், விசாவும் அத்தனை உறுதியாக இருந்தன. நீண்ட மேலங்கியைத் துளைத்து குளிர் அவன் உடம்பை நடுங்கவைத்தது. எல்லை பொலீஸ்காரர் பழைய காலத்து செப்பேட்டை ஆராய்வதுபோல குனிந்து கண்களைச் சுருக்கி கூர்ந்து படித்தார். கடவுச்சீட்டில் 48 பக்கங்கள் இருக்கவேண்டும், அவனுடையதில் 46 பக்கங்கள் மட்டுமே இருந்தன. அவனுக்கே அது தெரியாது. அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்க்கள்.
 
ஒரு சின்ன அறைக்குள் நுழைந்தபோது மின்தூக்கியில்  ஏறியிருப்பதாக அவன் நினைத்தான். அதுதான் விசாரணை அறை. அதிகாரி மேசையின் முன் உட்கார்ந்து ’சொல்லுங்கள்’ என்றார். அவன் இன்னொரு நாற்காலியில் உட்கார்த்தி வைக்கப்பட்டான். ’என்ன?’ என்றான், ஒன்றுமே புரியாமல். ’உங்கள் கதையை. ஆரம்பத்திலிருந்து’ என்றான். அவனுக்கு கிரேக்க மொழி தெரியும் ஆனால் தெரியாதது போல பாசாங்கு செய்தான். மெள்ள மெள்ள ஆங்கிலத்தில் சொல்லத் தொடங்கினான்.
 
‘இதே கிரீஸில்தான் மூன்று வருடங்களுக்கு முன்னர், 1983ம் ஆண்டு, கப்பலில் சேர்ந்தேன். அதன் பெயர் ஆர்கோ. என்னுடைய முதல் பயணம் பிரேசில் நாட்டுக்கு. அதற்குப் பின்னர் பலப்பல நாடுகளுக்கு பயணித்தேன். உலகம் முழுக்க சுற்றினேன். இறுதியில் ஒருநாள் துருக்கி பாண்டிர்மா துறைமுகத்தில் கப்பலை விற்றுவிட்டார்கள். வேலை போய்விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றபோது மூன்று பாகிஸ்தானிகள் எனக்கு உதவினார்கள். என் வாழ்க்கை மாறியது. ’துருக்கியில் பொஸ்ஃபோரஸ் என்ற இடத்தில் தங்கினோம். கிழக்கும் மேற்கும் சந்திக்கும் அற்புதமான இடம். எங்கள் விடுதியில் நின்று பார்த்தால் நீல மசூதி தெரியும். துருக்கியில் இயங்கும் மாஃபியா கும்பலுக்கு வேலை செய்வது என்று முடிவெடுத்தோம். அங்கே மாஃபியா ஓர் அரசாங்கம் போல பலத்துடன் செயல்பட்டது. அவர்கள் ஆதரவு இருந்தால் எந்த பிரச்சினையையும் கடந்துபோகலாம் என்றார்கள். நான் புதிதானபடியால் பாகிஸ்தானியர்கள் எனக்கு வேலை கற்றுத்தந்தார்கள். 
’துருக்கியில் 1980 களில் கார்கள் இறக்குமதி கிடையாது. கள்ளச் சந்தையில் அவற்றின் விலை எக்கச்சக்கமாக இருக்கும். எங்கேயாவது கார் ஒன்று விபத்தில் சிக்கினால் மாஃபியா கும்பல் லைசென்ஸ் தகடுகளை உடனே பிடுங்கிவிடும். அதே மாதிரியான ஒரு புதுக்காரை சுவிட்சர்லாந்தில் இருந்து வருவித்து லைசென்ஸ் தகட்டை மாற்றி விற்றுவிடுவார்கள். ஒரு கார் 40,000, 50,000 டொலர்கள் என்று விலைபோகும். எங்கள் வேலை சுவிட்சர்லாந்துக்கு விமானத்தில் போய் அங்கே அவர்கள் சொன்ன வகைக் காரை வாங்கி ஓட்டிக்கொண்டு வந்து துருக்கியில் கொடுப்பது. மிகச் சுலபமான வேலைதான். சூரிச்சில் தொடங்கி இத்தாலி, யூகோஸ்லாவியா, புல்கேரியா நாடுகளைக் கடந்து துருக்கிக்கு ஓட்டவேண்டும். கூலியாக 5000 டொலர்கள் தருவார்கள். ஒரே வாரத்தில் இரண்டு கார்களைக்கூட கடத்தியிருக்கிறேன். கையிலே அத்தனை பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விரயம் செய்த நாட்கள் அவை. 
 
சுவிட்சர்லாந்தில் ஒருநாள் பளிங்குத் தரையில் ஒரு பெண்ணின் பிம்பத்தை கண்டு மோகித்தேன். அவள் அந்த நாட்டு நீச்சல் வீராங்கனை, பெயர் ஸிமோனா. மெய்யான நீலக்கண்கள். உற்றுப் பார்த்தால் ஒரு கடலுக்குள் மூழ்கிவிட்டதுபோல இருக்கும். சுவிட்சர்லாந்தில் நிற்கும் நாட்களில் அவளுடனேயே தங்குவேன். கவலை இல்லாத நாட்கள் அவை. ஸிமோனா நான் ஒரு பணக்கார விற்பனை அதிகாரி என்று நினைத்திருந்தாள். ஒருநாள் அவளிடம் உண்மையை சொன்னபோது ஒரு துள்ளுத்துள்ளி எழுந்து நின்றாள். தாங்க முடியாத உவகை அவளுக்கு. துணிச்சல்காரி; சாகாசத்துக்கு அலைபவள். ’என்னையும் உன்னுடன் அழைத்துப்போ’ என்றாள். மாஃபியாவுக்கு அது பிடிக்காது எனினும் அவள் பக்கத்தில் இருக்க புதுக்காரை 2500 கி.மீட்டர்கள் ஓட்டினேன்.  
துருக்கி எல்லைக்குள் நுழைந்ததும் முதலில் எதிர்ப்பட்ட உணவகத்தில் காரை நிறுத்தினேன். வாசலில் ஒருவன் இரண்டு கைகளாலும் தூக்கி ஒரு வாத்தியத்தை வாயிலே வைத்து ஊதினான். அதன் நீளம் வாசிக்கும்போது சிலசமயம் கூடியது; சிலசமயம் குறைந்தது. நான் அவனுக்கு 100 லீரா காசு போட்டேன். ஸிமோனா என் பையிலிருந்து பிடுங்கி இன்னொரு 100 லீரா போட்டாள். அவள் மகிழ்ச்சியில் இருந்தாள். நாங்கள் உணவருந்திவிட்டு திரும்பியபோது எங்கள் காருக்கு முன்னால் இன்னொரு கார் நின்றது. காரிலே ஒருவரும் இல்லை ஆனால் உள்ளுக்கிருந்து கடாமுடாவென்று சத்தம் வந்தது. ஸிமோனா என்னிடம் ஆலோசனை கேட்கவில்லை. கனமான ஸ்பானரை எடுத்து ஓர் அடியில் கார் டிக்கி கதவை திறந்துவிட்டாள். அதற்குள் கைகால்கள் கட்டப்பட்டு ஒரு பெரிய உருவம் கிடந்தது. அத்தனை பெரிய உருவத்தை எப்படி சுருட்டி உள்ளே வைத்தார்களோ தெரியவில்லை. அவன் வாயை அவிழ்த்ததும் தன்னைக் காப்பாற்றச்சொல்லி மன்றாடினான். யோசிப்பதற்கு நேரம் இல்லாததால் அவனைக் காரிலே ஏற்றிக்கொண்டு வேகமாகப் பறந்தோம். ஸிமோனா இரண்டு வால் கிடைத்த நாய்போல மகிழ்ச்சியில் தத்தளித்தாள். அவளுக்கு சாகசம் பிடிக்கும்.
 
அவனுடைய பெயர் மெஃமெட். அவன் வேறு மாஃபியா கும்பலை சேர்ந்தவன். எதிரிகள் அவனைப் பிடித்து கொல்வதற்காக கொண்டு போயிருக்கிறார்கள். 20 மைல் தள்ளி அவனை இறக்கிவிட்டபோது ‘கண்கள் கலங்க எனக்கு உயிர்தந்த உங்களை மறக்கமாட்டேன். நன்றி’ என்றான். நான் ஓட்டிவந்த காரை மாஃபியாவிடம் ஒப்படைத்துவிட்டு, பணத்தைப் பெற்றுக்கொண்டு நான்கு நாட்கள் ஸிமோனாவுடன் உல்லாசமாகச் சுற்றினேன். அதி விலை உயர்ந்த ஹொட்டல்களில் தங்கினோம். அயாசோஃபியா கட்டிடத்தை 100 தடவை படம் பிடித்தாள். அது 1500 வருடம் பழமை வாய்ந்த கட்டிடம். முதலில் தேவாலயமாக இருந்து பின்னர் மசூதியாக மாற்றப்பட்டு அதற்கும் பிறகு அருங்காட்சியமாக வடிவமைக்கப்பட்டது. அதன் முன்னால் என்னை நிற்கச் சொன்னாள். ’நான் துப்பாக்கி வைத்திருக்கிறேனா. அல்லது பல் வைத்தியரா. அல்லது வருமானவரி அதிகாரியா. சிரி’ என்றாள். ’யார் வருமானவரி அதிகாரி?’ என்றேன். அப்படி ஒருவர் இருப்பதும், உழைக்கும் காசுக்கு வரி செலுத்தவேண்டும் என்பதும்கூட எனக்கு தெரியாது.
 
அன்றிரவை மறக்க முடியாது. ஒரு காலணியை மற்றக் காலால் அகற்றினாள். எனக்கும் சுவருக்கும் இடையில் அவள் படுத்தபோது வேடிக்கையாக இருந்தது. முதலைபோல இரண்டு கால்களையும் மடித்தபடிதான் படுப்பாள். அன்று மியூசியத்தில் பலவித ஓவியங்களை பார்த்திருந்ததால் அவள் ஒரு கேள்வி கேட்டாள். ‘அது எப்படி ஆதாமும் ஏவாளும் வரும் ஓவியங்களில் எல்லாம் சரியாக ஒரு செடியின் இலைகள் அந்தந்த இடங்களை மறைக்கின்றன’ என்றாள். அதன் காரணத்தை அவள் வாய்க்குள் சொன்னேன். அவள் கண்மை மீன் செதிள்போல இரவிலே பளபளத்தது. அவள் பிடரியிலே மயிர் நிறம் மாறும் இடத்தில் முத்தமிட்டேன். அவள் மூச்சு எனக்கு கேட்டது. பின்னர் என் மூச்சு எனக்கு கேட்கத் தொடங்கியது. அன்று இரவு நாங்கள் தூங்கவே இல்லை. அதன் பின்னர் நான் அவளைச் சந்திக்கவில்லை. அதுதான் கடைசி இரவு என்பது அவளுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. 
 
விமான நிலையத்தில் தடுப்புக்கு அப்பாலிருந்து சத்தியப் பிரமாணம் செய்வதுபோல வலது கையை உயர்த்தி விடைபெற்றாள். மின்படிகள் மடிந்து மடிந்து கீழே போக அவள் பின்தலையும் மெள்ள மெள்ள மறைந்தது. நான் திரும்பியபோது இருவர் என்னை தொடர்ந்தார்கள். துருக்கி பொலீஸார். கடவுச்சீட்டை காட்டச் சொன்னார்கள். எனக்கு உடனே விசயம் விளங்கிவிட்டது. துருக்கிக்குள் நுழையும் போது கடவுச்சீட்டில் ஒரு காரின் படமுத்திரையை குத்துவார்கள். காருடன் நாட்டைவிட்டு போகும்போது அந்த முத்திரையை நீக்கிவிடுவார்கள். பொலீஸ்காரர் ’எங்கே கார்?’ என்றார். நான் பேசாது நின்றேன். சிறையிலே என்னை அடைத்தார்கள். நாற்பது பேர்களால் நிறைந்திருந்த சிறை. மூன்று நாள் அந்த நரகத்தில் இருந்தபின்னர் மாஃபியா வந்து என்னை மீட்டது. என்மேல் பொலீசாருக்கு சந்தேகம் விழுந்துவிட்டதால் மாஃபியாவுக்கு என்னால் பிரயோனமில்லை. ஆனாலும் நல்லவர்கள். கட்டாருக்கு டிக்கட் தந்து அங்கே ஒரு கப்பல் வேலைக்கும் ஏற்பாடு செய்தார்கள்.
 
கட்டாரில் என்னொடு சேர்த்து 19 பேர் கப்பலில் வேலைக்கு ஏறினோம். ஒருவரோடு ஒருவர் அறிமுகம் செய்துகொண்டோம். என் பெயரைச் சொன்னபோது ஒருவரும் சிரிக்கவில்லை. எனக்கு ஆறுதலாக இருந்தது. அந்தக் கப்பல் மிகப் பழையது. பேய்பிடித்ததுபோல இருந்தது. கப்பலில் அதிகாரிகள் ஒருவருமே இல்லை. என்ன செய்வது என்று தெரியாத குழப்பத்தில் நாள் முழுவதையும் கழித்தோம்.  இரவு 11 மணி அளவில் காப்டனும் இரண்டு அதிகாரிகளும் தடதடவென்று வந்து ஏறினர். கப்பலில் சாமான்கள் இல்லை. போதிய உணவு இல்லை. எங்கே போகிறது என்று ஒருவருக்குமே தெரியாது. நாங்கள் ஒருவருடன் ஒருவர் ரகஸ்யமாகப் பேசிக்கொண்டு, உள்ளுக்குள் பயந்தபடியே இருந்தோம். ஏதோ பெரிய அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை மட்டும் உணரமுடிந்தது.
 
நாலாவது நாள் கப்பல் டிஜிபுட்டி போய் ஒருநாள் நின்றது. ஒருசாமானும் ஏற்றவில்லை.  சிலநாட்களில் ஏடன் துறைமுகத்தை தாண்டியபோது இன்னும்கூட பயம் பிடித்தது. என்னுடன் வேலை செய்த கிறிஸ்தவ பையன் அழத் தொடங்கினான். நான் சொன்னேன் ’அழுவதற்கு ஒரு திறமையும் தேவை இல்லை. குழந்தைகூட அழும். நீ ஒரு மாலுமியாக செயல்படும் நேரம் இது’ என்றேன். நடுங்கிக்கொண்டு சிலுவைக் குறியிட்டான். என்னவென்று கேட்டேன். பூமியில் முதலில் இறந்த மனிதனின் சமாதி அங்கே இருக்கிறது என்று சுட்டிக் காட்டினான். ’ஆதாமின் சமாதியா?’ அவன் ’இல்லை, இல்லை. முதலில் உண்டான மனிதன்தான் ஆதாம். முதலில் இறந்தவன் ஆபேல், ஆதாமின் இரண்டாவது மகன். அவன் கொலைபட்டல்லவோ இறந்தான். நீ சிலுவைக் குறியிடு, உனக்கு நன்மை கிடைக்கும்’ என்றான். எதற்கும் இருக்கட்டும் என்று நானும் சிலுவைக்குறி போட்டேன்.
 
இரண்டு நாட்களுக்கு முன்னர் உணவு முடிந்துவிட்டது. நேற்றோடு தண்ணீரும் இல்லை.  இரவு பத்துமணியிருக்கும். திடீரென்று கப்பல் பேய் வேகம் எடுத்து பயங்கரமாக ஆட ஆரம்பித்தது. கப்பல் இந்த வேகத்தை தாங்க முடியாது என்பது எனக்குத் தெரியும். நான் எழுந்து உட்காரமுயன்றேன். இதனிலும் மோசமான ஒன்று நடக்கமுடியாது என்று நான் நினைத்தபோது அது நடந்தது. கப்பல் பெருஞ்சப்தத்துடன் பாறையில் மோதி சரிந்தது. சுவரில் ஒரு கிரேக்க அழகியின் காலண்டர் மாட்டியிருந்தது. அடிபட்ட வேகத்தில் காலண்டர் திரும்பி பின்பக்கமாக ஒரு கோணத்தில் தொங்கியது. பின் அட்டையிலே குழந்தையின் கையெழுத்தில் ஒரு வாசகம் எழுதியிருந்தது.
 
 ‘ ஆபத்து. இந்தக் கப்பலை உடைத்து காப்புறுதி பணம் வாங்க திட்டமிட்டிருக்கிறார்கள். உடனே தப்பி ஓடவும்.’
 
நான் மேல் தளத்துக்கு பாய்ந்து வந்தபோது உயிர்காப்பு படகுகளில் ஆட்கள் ஏறி தப்பிக்கொண்டிருந்தார்கள். நானும் குதித்தேன். எகிப்தின் தலைநகரமான கெய்ரோவுக்கு எங்களை அழைத்துச் சென்று, அவசர அவசரமாக அவரவர் நாடுகளுக்கு டிக்கடையும், சம்பளத்தையும் கொடுத்து போகச் சொன்னார்கள். என்னுடன் வந்த 18 பேரும் வாய் திறக்காமல் அவர்கள் கொடுத்ததை வாங்கிகொண்டு சென்றார்கள்.
எனக்கு புரிந்துவிட்டது. கப்பலை உடைத்து அவர்கள் மில்லியன் கணக்கில் சம்பாதிப்பார்கள். எங்கள் உபயோகம் முடிந்துவிட்டது. என் முறை வந்தபோது கையில் டிக்கட்டை தந்தார்கள்.  ’14ம் தேதி டிக்கட் போடப்பட்டிருந்தது. விபத்து நடந்தது 17ம் தேதி. எப்படி சாத்தியம்? இது மிகமோசமான மோசடி. நான் விடப்போவதில்லை. லோயிட்ஸ் காப்புறுதி நிறுவனத்திற்கு  அறிவிக்கப்போகிறேன். எங்கள் எல்லோருக்கும் தகுந்த இழப்பீடு தரவேண்டும்’ என்றேன். அவர்கள் ’உங்களை மேலதிகாரியிடம் அழைத்துச் செல்கிறோம்’ என்றார்கள்.
 
இரண்டு நாள் கழிந்தது. கெய்ரோவின் மிக ஒடுக்கமான பாதைகளில் அலையவைத்து, ஒரு பழைய வீட்டுக்கு கீழே உள்ள பாதாள அறைக்கு என்னை கூட்டிச் சென்றார்கள். அது ஆடம்பரமாக பளிச்சென்று இருந்தது. இரண்டு காவலாளிகள் துப்பாக்கிகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நின்றார்கள். அவர்கள் தலைவன் சிங்காசனம் போன்ற ஒன்றில் பாதி உடல் வெளியே தள்ள சரிந்து கிடந்தான். கீழே லுங்கி; மேலே சட்டை இல்லை. அவன் வயிறு மடிந்து மடிந்து அவன் வயிற்றின் மேலேயே கிடந்தது. முகத்தை திருப்பினான். என்னையறியாமலே நான் கத்திவிட்டேன். ’மெஃமெட்.’ துருக்கியில் காருக்குள் மடித்துவைக்கப்பட்ட அதே மனிதன். ’நண்பா’ என்று கத்தியபடி சிரமத்துடன் எழுந்து வந்து என்னைக் கட்டிப்பிடித்தான். நான் மறைந்துபோனேன். அவன் சொன்னான். ‘உன்னைக் கொல்லச்சொல்லி எனக்கு உத்தரவு வந்திருக்கிறது. ஒருமுறை நீ என்னைக் காப்பாற்றினாய். இம்முறை நான் காப்பாற்றுகிறேன். கணக்கு தீர்ந்தது. அடுத்தமுறை நீ பிடிபட்டால் நான் கொன்றுவிடுவேன்’ என்றான். பின்னர் ’உனக்கு என்ன வேண்டுமோ கேள். எதைக் கேட்டாலும் தருவேன்’ என்றான்.
 
’நான் அமெரிக்க விசா கேட்டிருக்கலாம். பிரெஞ்ச் விசா கேட்டிருக்கலாம். ஸிமோனாவின் நாட்டுக்கு விசா கேட்டிருக்கலாம். ஆனால் நான் கிரீஸ் போகவேண்டும் என்று சொன்னேன். போதிய பணம் கையிலே தந்து அவன்தான் என்னை இங்கே அனுப்பினான்’ என்றான். 
இரண்டு எல்லை பொலீஸ்காரர்களும் நம்ப முடியாமல் அவனையே உற்று நோக்கினர். ஒருவன் கேட்டான். ’மறுபடியும் எதற்கு இங்கே வந்தாய்?’ 
 
‘இங்கேதானே நான் ஆரம்பித்தேன்’ என்றான்.  இப்போது மூன்றாவதாக ஒருத்தன் வந்து சேர்ந்தான். நூதனமான பிராணியை பார்ப்பதுபோல அவனை பார்த்தான். ’ஓணானுக்கு பிறந்தவன் என்ன சொல்கிறான்?’ என்று கேட்டான். அவர்கள் சொன்னார்கள், ’கதை அளக்கிறான்.’ பின்னர் மூவரும் கலந்து ஆலோசித்தார்கள். உரத்த குரலில் சண்டையிட்டார்கள். அவர்கள் அவனைச் சிறையில் அடைக்கலாம். அதனால் அவர்களுக்குத்தான் நட்டம். திருப்பி அனுப்பவேண்டும் என்றால் டிக்கட் காசை அரசாங்கம் கொடுக்கவேண்டும். அது இன்னும் கூடிய நட்டம். புதிதாக வந்தவன் 46 பக்க கடவுச்சீட்டை கையிலே வைத்து ஆட்டிக்கொண்டு கிரேக்க மொழியில் ’இவனிடம் நிறையப் பணம் இருக்கவேண்டும். இவனைக் கொன்றுவிட்டால் என்ன?’ என்றான். 
 
பைதகரஸ், பிளெட்டோ, ஆர்க்கிமெடிஸ் போன்ற அதி உன்னத கிரேக்க மூளைகளின் வழிவந்தவர்கள் தங்களிடமிருக்கும் சின்ன மூளைகளை பாவித்து சிந்தித்தார்கள். வாக்குவாதப்பட்டார்கள். அவனுக்கு சிரிப்பாக வந்தது. இலங்கையை விட்டு அவன் வெளியேறி சரியாக 3 வருடம், 4 மாதம் 8 நாட்கள். இவர்கள் கொடுக்கப் போகும் எந்த தண்டனையும் அவன் ஏற்கனவே அனுபவித்ததற்கு கிட்டவும் வரமுடியாது. இறுதியில் அவர்கள் எந்த முடிவுக்கு வந்தாலும் அவனுக்கு சரிதான். இவர்களுக்கு பாவம் ஒரு நாடுதான் இருக்கிறது. அவனுக்கு உலகம் முழுக்க நாடுகள். 
 
END
 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta