எமது மொழிபெயர் உலகினுள்
எஸ்.கே.விக்னேஸ்வரன்
உலகம் எங்கணும் பரந்து வாழும் எழுபத்தி எட்டுத் தமிழ்க் கவிஞர்களின் தெரிந்தெடுக்கப்பட்ட
கவிதைகளை அவற்றின்ஆங்கில மொழிபெயர்ப்புடன் இருமொழி நூலாகத் தமிழ் இலக்கியத்
தோட்டம் கடந்தவாரம்(மார்ச் 9, 2014) ரொறொன்ரோவில் வெளியிட்டு வைத்தது. தமிழ்
இலக்கியத் தோட்டம், கனடாவில் இயங்கிவரும் அரசு சார்பற்ற அறக்கட்டளையாகும்.
இவ்வமைப்பு தமிழ் இலக்கியப் படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல்,இலக்கியம்
சார்ந்த விரிவுரைகளுக்கு உதவித் தெகை வழங்குதல், இலக்கியம் சார்ந்தும் சாராததுமான
பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் சாதனைகளை அங்கீகரித்து வருடாவருடம் விருது
வழங்கல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை உலகளாவிய ரீதியில் 13
சாதனையாளர்கள் வாழ்நாள் விருதான இயல்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இலக்கியத் தோட்டத்தின் தொடர்ச்சியான இந்தச் செயற்பாட்டின் ஒரு அம்சமாக இப்போது இந்த
நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும்புலம்பெயர்தேசங்களில்
வாழ்கின்ற, கவிஞர்களின்கவிதைகள்இந்நூலில்தொகுக்கப்பட்டுள்ளன. பேராசிரியர்செல்வா
கனக நாயகம்தொகுத்துள்ள இந்நூலின்மொழி பெயர்ப்புக்களை எம்.எல்தங்கப்பா, அனுஷியா
ராமஸ்வாமி, மைதிலி தயாநிதி ஆகியோர்செய்துள்ளனர். இருநூற்றி எழுபது பக்கங்கள்கொண்ட
இந்நூலிற்குத்தொகுப்பளர்கள்வழங்கியுள்ள பெயர்: 'In Our Translated World' ( எமது மொழிபெயர்
உலகினுள்). ஜேர்மன்கவி ரெய்னர் மாரியா ரில்கே தன்னுடைய கவிதையொன்றில், ’the
animals know by instinct we’re not comfortably at home in our translated world’ என்கிறார். விலங்குகள்
கூட மொழி பெயர்உலகத்தில்இயல்பாக இருக்க முடியாது. அப்படியானால்மனிதர்களின்
வாழ்வும்படைப்பும்மொழிபெயர்உலகில்எப்படி இருக்கும்என்ற சிந்தனையே இந்த நூலின்
தலைப்பாக அமைந்ததற்கு காரணம். மிகுந்த செய்நேர்த்தியுடன், கவனமெடுத்துத்தயாரித்து
வெளியிடப்பட்டிருக்கும்இந்நூல்கவிஞரும்ஓவியருமான றஷ்மியின்அட்டை வடிவமைப்புடன்
வெளிவந்துள்ளது.
தமிழ் -ஆங்கில இரு மொழிக் கவித்தொகைகள் சில ஏற்கனவே வெளிவந்துள்ளன. கவிஞர்
சேரனின் In a Time of Burning அண்மையில் வெளிவந்த இவ்வாறான ஒரு தொகுப்பு ஆகும்.
அதே வேளை உலகத் தமிழ்க் கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புகளும் தமிழில்
வெளிவந்துள்ளன. ஆனால் இந்தத் தொகுப்பு, முதன் முதலாக உலகத்தமிழ்க் கவிஞர்களது
தேர்ந்தெடுக்கப்பட்ட இருமொழி நூலாக வெளிவந்த சிறப்பைப் பெற்றதாக அமைகிறது.
மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்படுவதன் நோக்கமே, தமிழில் வாசிக்கமுடியாத
வாசகர்களுக்கு குறிப்பாக, வேற்று கலாசார, சமூகப் பின்னணிகளைக் கொண்டவர்களுக்கு
அறிமுகப்படுத்துவதுதான். இத்தொகுப்பிலுள்ள கவிதைகளைக் கடந்த மூன்று தசாப்த
காலத்துள் எழுதப்பட்ட தமிழ்க் கவிதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாதிரியாகக் கொள்ள
முடியும். உண்மையில் அத்தகைய ஒரு நோக்குடன் தான் கவிதைகள் கவனமெடுத்துத்
தொடுக்கப்பட்டுள்ளன என்று நூலுக்கு வழங்கிய அறிமுகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு கடந்த மூன்று தசாப்த காலத்தின் கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தி
நிற்பது கவனத்திற்குரியது. ஈழத்துக் கவிதைகளில் பெரும்பாலும் யுத்த சூழலின்
அச்சுறுத்தலும் அதன் காரணமான இடப்பெயர்வும் தெரிகிறது. தமிழ்நாட்டுக் கவிதைகள்
காதல் இழப்பு, பெண்ணடிமைத்தனம், பிரிவுத்துயர் என்ற உணர்வுகளின் வெளிப்பாடாய்
அமைந்திருக்கின்றன. புலம்பெயர் கவிதைகளில், பிரிந்த நாடு பற்றிய ஏக்கமும், புலம்பெயர்
நாடுகளில் இன்னமும் ஒட்டியும் ஒட்ட முடியாமலும் உள்ள தவிப்பும் வெளிப்படுகிறது.
கைவிடப்பட்ட கிராமம் பற்றிய பாடலில் அகிலன் இப்படிப் பாடுகிறார்
'…..
விழி திறந்து
இரவுக் கடலில் எரிகின்ற சூள் விளக்குகளை
விழாநாட் தெருக்களில்
ஓயாது முழங்குகின்ற பறைகளின் ஒலிகளை
காற்றைப் பிடித்துலுப்பி எழுகிற
மூதாதையரின் பாடல்களை
வாள் முனையில் உயிர்துடிக்க
இழந்துதான் போனோமா?
நிலாந்தனுக்கோ, யுத்தம் நிகழ்ந்து முடிந்த தேசம் கிளப்பும் உணர்வு இப்படி அமைகிறது.
'…..
பெயர்க்கப்பட்டது நடுக்கடல்
துயிலாதலைகிறது
பெருங்கனவு
இரும்பு வணிகர்
உலவும் காட்டில்
பூத்திருக்கிறது கார்த்திகைப்பூ
தொகுப்பில் தேவஅபிரா, புலம்பெயர் தேசம் அந்நிய தேசம்மட்டுமல்ல எமது தேசத்தை
சுரண்டிக் கொழுத்த தேசம் என்ற உணர்வு உறுத்த, அந்தத் தேசத்துடன் வாழும் தமது
வாழ்வினை ஒட்டமுடியாது தவிக்கும் மனநிலையை வெளிப்படுத்துகிறார்.; அவரது
கவிதை இப்படி முடிகிறது:
கனவுகள் வெடித்த காலக் கிழவியின் நெற்றியென கற்கள் நெருங்கி
புல்லும் கருக மருந்தடித்த இரவு வீதியில்
திமிறிக் கிடந்த வரலாற்று வேர்களில் தடக்கி
புலத்தைப் பாடும் துருக்கிக்காரன் இரவுப் பாட்டில்
சில்லறையென விழுந்தேன்.
இலையுதிர் காலத்தின் மழை நகரத்தை மூடுகையில்
விசும்பின் தொன்மையின் கீழ்
நானும் அவனும் தனித்து நடுங்கிக் கொண்டிருந்தோம்.
இந்த தசாப்த காலம்தான் பெண்நிலை குறித்த தீவிர சிந்தனையைத் தமிழுக்குத்
தந்தகாலம். பெண் உடல் குறித்த அரசியல் தீவிர விவாதப் பொருளாகப் பேசப்பட்ட
காலம். பாலியல் உறவுகள் மற்றும் பெண் பாலுறுப்புகள் தொடர்பான கருத்துக்களும்
கட்டுப்பெட்டித்தனங்களும் தீவிரமாக உடைபடக் காரணமாக இருந்த காலம். பல
பெண்கவிஞர்களின் கவிதைகள் தமிழ் கவிதைப்போக்கில் புதிய எழுச்சியையும்
வீச்சையும் வெளிப்படுத்தி தமிழ்க் கவிதைக்குப் புதிய பரிமாணங்களை வழங்கிய
காலம். பாலியலுறுப்புக்கள் வீச்சுமிக்க அரசியற் படிமங்களாயும் குறியீடுகளாகவும்
பயன்படுத்தப்படத் துவங்கிய இந்தக்காலம் பெண் அரசியலுக்கு மட்டுமல்ல தமிழுக்கும்
முக்கியமான காலமுங்கூட. இந்தத் தொகுப்பு இந்தப் போக்கை முடிந்தளவு
பிரதிநிதித்தவப்படுத்த முயன்றிருக்கிறது. குட்டி ரேவதி, மாலதி மைத்திரி, பெருந்தேவி, அனார்
என்று பல பெண் கவிஞர்களின்ஆழ்மன வீச்சை வெளிப்படுத்தும் கவிதைகள் இத்தொகுப்பில்
சேர்க்கப்பட்டடுள்ளன. லீனா மணிமேகலையின் கவிதை வரிகள் ரத்தத்தை தொடுகின்றன.
தேவிடியா என்ற வார்த்தையை நான் முதலில் கேட்டபோது
எனக்கு வயது பத்திருக்கும்
அப்போது எனக்கு முலைகள் வாய்த்திருக்கவில்லை
வயதுக்கு வந்திராத யோனியை
சவரக்கத்தியால் கீறித் திறந்தால்
குபுகுபுவென கொட்டும் ரத்தத்தைப்போல சூடாக தளும்பியது அந்த வார்த்தை
காரணம்
உள்ளாடை போடாமல் வாசல் படி இறங்கியதென்பதாக இருந்தது.
விக்கிரமாதித்யன் தன் கவிதையில் பொருள் தேடுவதற்கு வெளியூர் செல்லும்
தகப்பனின் மனம் பற்றி எழுதுகிறார். பேருந்தில் ஓட்டுநரின் இருக்கைக்கு பின் அமரும்
தகப்பன் தன் பிள்ளைகளையும் மனைவியையும் நினைக்கிறார். அவர் மனது கிடந்து
அடித்துக்கொள்கிறது. ரேணுகா (மலேசியா) தன் கவிதையில் ‘என்னை தெருநாய் என்று
மட்டும் சொல்லாதீர்கள்’ என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறார். நெப்போலியன் (சிங்கப்பூர்)
தன் கவிதையில் சொல்கிறார்.
என் பெயர் கருப்பையா கந்தசாமி
வயது 22
கடன்பட்ட தொகை 180000 ரூபாய்
கழிவறைகள் கழுவுவதும் உண்டு
தொடர்ந்து வேலை இருப்பின்
ஒன்றரை வருடத்தில் கடன் அடைக்கலாம்.
இத்தொகுப்பில் விடுபட்டுப் போன கவிஞர்களும் கவிதைகளும் இல்லாமல் இல்லை.
ஒரு தொகுப்பை மேற்கொள்ளும் போது இத்தகைய ஒரு நிலை ஏற்படுவது தவிர்க்க
முடியாததுதான். மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் பல கவிதைகள் அந்தக் கவிஞர்களது சிறந்த
கவிதைகள் அல்ல என்ற நிலமையும் இருக்கிறது. ஆனல் இதற்கு பேராசிரியர் செல்வா
கனகநாயகம் முன்வைக்கும் காரணம் கவனத்திற்குரியது. தமிழ் அடையாளத்தின் பன்முகத்
தன்மையை வெளிப்படுத்தக்கூடிய கவிதைகளே பெரிதும் கவனத்திலெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ் வாசிக்க முடியாத வாசகர்களை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட நூலில்
ஒவ்வொரு கவிஞர்களதும் நல்ல கவிதைகளை மொழிபெயர்ப்பதை விடவும் தமிழின்
அனுபவத்தை பகிர்வதற்குரிய கவிதைகளே முக்கியத்துவம் பெறமுடியும். எனவே இத்
தொகுப்பில் தொகுக்கப்படாத கவிதைகள் தரம் குறைந்தவை என்றோ சேர்க்கப்படாத கவிஞர்கள்
புறமொதுக்கப்பட்டதாகக் கொள்ளப்படுவதோ பொருந்தாது என்கிறார்.
தவிரவும் இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும். தமிழ்க் கவிதை என்பது இன்று
அடைந்துள்ள பரிமாணம் முன்னெப்போதையையும் விடவும் வேறுபட்டது. கடந்த மூன்று
தசாப்த காலத்தில் ஒரு பெருஞ் சூறாவளிபோல புலப்பெயர்வு தமிழ்பேசுவோரை உலகெங்கும்
பெருமளளவில் வீசி எறிந்துவிட்டுள்ளது. இது தமிழை அனைத்துலகிலும் பல்வேறு
இடங்களில் புழங்கு மொழியாக ஆக்கிவிட்டது. ஒரு நாட்டிற்குரிய மொழி என்ற எல்லையை
தாண்டி ஒரு உலக மொழியாகப் பரவ வகை செய்துள்ளது.. கூடவே வளர்ந்த இலத்திரனியற்
தொடர்பாடலும் மின் அம்பலமும் எல்லைகளையும் நாடுகளையும் தாயகங்களையும் கடந்து
தமிழ் அனுபவங்களையும் தமிழ் அடையாளங்களையும் சாத்தியமாக்கி விட்டுள்ளது.
இந்தியத் தமிழ் ,ஈழத் தமிழ், மலேசியத் தமிழ், சிங்கப்பூர்த் தமிழ் என்ற வரையறைகள்
உலகத்தமிழ் என்ற பரந்த பொதுமையின் அங்கங்களாகியுள்ளன. தவிரவும், தமிழை
அறியாவிடினும் தமிழ்க் கவிதையை படிக்க விரும்புகின்ற ஒரு சந்ததியின் உருவாக்கமும்,
இப்புலப் பெயர்வுகாரணமாக சாத்தியமாகி வருகிறது. எனவே முழு உலகுடனும் தமிழ்
உறவாட இத்தகைய மொழிபெயர்ப்புக்கள் முன்னெப்போதையையும் விட அவசியமானவை.
பல மொழிகளிலும் தமிழ் இலக்கியம் பெயர்க்கப்பட வேண்டிய தேவையும் உருவாகியுள்ளது.
அந்த வகையில், இந்தத் தொகுப்பு இத்தகைய ஒரு மாற்றத்தின் அங்கமாகவே கொள்ளப்பட
வேண்டும். சங்க இலக்கியங்களில் பேசப்படும் 'மொழிபெயர் தேய'மெனக் கொள்ளப்படக்
கூடிய 'தேயங்'களை நினைவூட்டும் இன்றைய தமிழின் பரம்பல் நிலையில் இத்தகைய
பல நூறு தொகுப்புக்களின் தேவை உண்டு. இந்த தொகுப்பை அத்தகைய ஒரு பணியின்
முதல் நூலாகவும் முக்கியமான தொகுப்பாகவும் கொள்ளலாம் என்பதில் ஐயமில்லை. தமிழ்
இலக்கியத் தோட்டத்தின் முயற்சி பாராட்டுக்குரியது.
(நன்றி – தீராநதி)