ஒரு நாள் இரவு இரண்டு மணிக்கு நான் தனியாக காரை ஓட்டிக்கொண்டு போனேன். ரொறொன்ரோ நகரத்தின் ஆறு வீதிகளிலும் ஒரு கார் கிடையாது; பஸ் கிடையாது; பாதசாரி கிடையாது. முழு ரோட்டும் எனக்காகவே போட்டிருந்தது. ஒரு சந்தி வந்து அங்கே சிவப்பு விளக்கு எரிந்தது. குறுக்கே போன அகலமான சாலையும் நிசப்தமாக இருந்தது. கார், பாதசாரிகள் என ஒன்றுமே கிடையாது. சும்மா ஒரு நிமிட நேரம் விளக்கைப் பார்த்தபடி காரில் அமர்ந்திருந்தேன். பச்சை விளக்கு விழுந்ததும் காரை எடுத்தேன்.
அப்பொழுது நான் யோசித்தேன். சிக்னல் விளக்கை கண்டுபிடித்தது முதலில் லண்டனில்தான். இப்பொழுது, ஏறக்குறைய 140 வருடங்கள் கழிந்த பின்னரும் ரோட்டு விளக்குகளில் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை. விஞ்ஞானம் எத்தனை தூரம் வளர்ந்துவிட்டது. சந்திரனில் கால்வைத்த பிறகு இன்று விண்கலம் செவ்வாயை தாண்டி வியாழனைத் தாண்டி சனிக்கிரகம் வரைக்கும்போய் ஆராய்ச்சி செய்கின்றது. ஒரு விமானம் பறந்துகொண்டிருக்க இன்னொரு விமானம் பறந்தபடி ஆகாயத்திலேயே அதற்கு எரிபொருள் நிரப்புகிறது. ஹபிள் தூரக்கண்ணாடி 350 மைல் உயரத்தில் 96 நிமிடத்துக்கு ஒருமுறை பூமியை சுற்றிக்கொண்டு கிரகங்களையும் விண்வெளி அதிசயங்களையும் ஓயாமல் படம் பிடித்துக்கொண்டிருக்கிறது. இத்தனை முன்னேற்றம் இருந்தும் சிக்னல் விளக்குகளில் வாகனங்கள் சும்மா நின்றுகொண்டிருப்பதை நிறுத்த முடியவில்லை.
சாலை விளக்குகளில் மந்திரக் கண்களை பொருத்திவிட்டாலே போதுமானது. எத்தனை வாகனங்கள் எந்த திசையில் என்ன வேகத்துடன் எவ்வளவு தூரத்தில் வருகின்றன என்பது சிக்னல் விளக்கு கணினியில் பதிவானால் விளக்குகள் அதற்கேற்ற மாதிரி செயலாற்ற முடியும். என்னுடைய கார் 100 அடி தூரத்தில் வரும்போதே ரோட்டில் வேறு வாகனங்கள் இல்லாத காரணத்தினால் பச்சை விழுந்திருக்க வேண்டும். ஆனால் விழவில்லை. இத்தனை பெரிய விஞ்ஞான வளர்ச்சி இருந்தும் இந்த சின்ன விசயம் இன்னும் கவனிக்கப்படாதது ஆச்சரியம்தான்.
இன்னும் பெரிய ஆச்சரியம் என் நண்பர் சொன்னது. அவர் கனடாவில் புகழ்பெற்ற வழக்கறிஞர். அவருக்கு ஒரு விநோதமான வழக்கு வந்தது. அவருடைய வழக்கில் வாய்பேசமுடியாத ஒருத்தர் சாட்சி சொல்லவேண்டும். சைகை மொழி தெரிந்த ஒருத்தரை மொழிபெயர்ப்பாளராக நியமித்தார்கள். நண்பர் கேள்வி கேட்க அதைச் சைகைக்காரர் சைகையில் சொன்னார். ஆனால் சாட்சி ஒன்றும் புரியாமல் திருதிருவென்று விழித்தார். பின்னர் தெரிய வந்தது என்னவென்றால் சாட்சிக்கு பிரிட்டிஷ் சைகை மொழிதான் தெரியும், அமெரிக்க சைகை மொழி தெரியாது. வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அவர்கள் இப்பொழுது பிரிட்டிஷ் சைகை மொழி விற்பன்னர் ஒருவரை தேடுகிறார்கள். வழக்கறிஞர் நண்பருக்கு இரண்டு சைகை மொழிகள் இருப்பது அன்றைக்குத்தான் தெரிந்தது. ‘இந்த அதிசயத்தை என்னென்பது. இருவருமே சைகை மொழி தெரிந்தவர்கள் ஆனாலும் அவர்கள் ஒருவரோடு ஒருவர் உரையாட முடியாது. இதுதானா உலகம் முன்னேறியிருக்கிறது என்பதற்கு அடையாளம்?’ வழக்கறிஞருக்கு கோபம் கோபமாக வந்தது.
கண்பார்வையற்ற நண்பர் ஒருவர் வங்கியில் வேலை செய்கிறார். அவருடைய கம்புயூட்டர் எழுத்தை குரலாக மாற்றும் திறனுள்ளது ஆகையால் அவருக்கு ஒருவித பிரச்சினையும் இல்லை. அவர் பிரெய்ல் மொழியை ஆங்கிலத்திலும் தமிழிலும் படித்தவர். அதில் தட்டச்சு செய்யவும் வாசிக்கவும் செய்வார். புள்ளிகளை 63 வடிவங்களில் அமைப்பதுதான் பிரெய்ல். ஆங்கிலத்திலும் தமிழிலும் இன்னும் உலகத்து வேறு மொழிகளிலும் அதே 63 வடிவங்கள்தான். தமிழில் பிரெய்லில் எழுதினால் அதை ஆங்கிலேயர் ஒருவர் தடவி படித்துக்கொள்ளலாம், ஆனால் பொருள் புரியாது. அவருக்கு தமிழும் தெரியவேண்டும். உலகத்திலே 40 மில்லியன் பார்வையற்றவர்கள் வாழ்கிறார்கள். எல்லோரும் இதே புள்ளி வடிவங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்கு ஒரு பொது மொழி இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் ஒரு பார்வையில்லாதவர் இன்னொருவரோடு பிரெய்ல் மூலம் கருத்து பரிமாறிக்கொள்ளலாம். என் நண்பருக்கு இது பெரிய ஆதங்கம் ஆனால் இதுபற்றி ஒருவருமே சிந்தித்தாகத் தெரியவில்லை.
வாகனங்கள் ஓட்டுவதை எடுத்துக்கொள்ளலாம். உலகத்தில் 66 வீதம் மக்கள் வாகனங்களை வலது பக்கத்தில் ஓட்டுகிறார்கள். மீதி 34 வீதம் மக்கள், இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆப்பிரிக்க போன்ற நாடுகளில் இடது பக்கத்தில் ஓட்டுகிறார்கள். இது எப்படி நிகழ்ந்தது? முந்திய காலத்தில் குதிரைகளில் செல்லுபோது போர் வீரர்கள் இடதுபக்கமாகவே பயணிப்பார்கள். அப்பொழுதுதான் எதிரிலே வரும் பகை நாட்டு குதிரை வீரனுடன் வலது கையால் வாளை உருவி போர் செய்யமுடியும். அந்தப் பழக்கத்தில்தான் இந்த நாட்டு மக்கள் இன்றும் இடது பக்கத்தில் வாகனத்தை ஓட்டுகிறார்கள். வேற்றுக்கிரக வாசி ஒருவர் உலகத்தைச் சுற்றிப் பார்க்க வந்தால் அவர் என்ன வாகனம் கொண்டு வருவார்?
1991 ம் வருடம் இத்தாலியின் அல்ப்ஸ் மலை பிரதேசத்தின் எல்லையில் பலவருடங்களாக பனியில் உறைந்து கிடந்த ஒரு மனித உடலை மலை ஏறிகள் கண்டு பிடித்தது ஞாபகத்துக்கு வரலாம். ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆகப் பழமையான சடலம் இதுதான். இந்த பனிமனிதனுக்கு விஞ்ஞானிகள் ஒட்ஸி என்று பெயர் சூட்டினார்கள். இவன் 5300 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து அவனுடைய 40 வயதளவில் இறந்துபோயிருக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்தனர். கடந்த 20 வருடங்களாக பல ஆய்வாளர்கள் இந்த பனிமனிதன் பற்றிய மர்மத்தை விடுவிக்க பாடுபடுகின்றனர்.
அவன் குளிரை தாங்குவதற்கு மூன்று அடுக்கு உடை அணிந்திருந்தான். கரடித்தோல் காலணியை புற்கள் நிரப்பி காலில் தரித்திருந்தான். மான்தோலில் செய்த அம்பறாத்தூணி, நாண் பூட்டாத வில், நெருப்பு உண்டாக்கும் குச்சிகள், கல்நுனி பதித்த ஈட்டி மற்றும் செம்பு முனைக் கோடரி ஆகியவை அவனிடம் காணப்பட்ட பொருட்கள். அவன் கடைசியாகச் சாப்பிட்ட உணவு மான் இறைச்சியும், கோதுமையும். 6500 அடி உயரத்தில் பாறையின் மறைவு ஒன்றில் வசந்த காலத் தொடக்கத்தில் அவன் இறந்திருக்கிறான். இருபது வருடங்களக பல விஞ்ஞானிகள் ஏன், எதற்காக, எப்படி இறந்தான் என்பதை துலக்குவதற்கு ஆராய்ச்சிகள் செய்தார்கள். ஆனால் தீர்மானமாக ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.
சிலர் அவன் ஆடு மேய்ப்பவன் வழிதவறிப்போய் குளிரில் மாட்டி இறந்துபோனான் என்றார்கள். இன்னும் சிலர் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் அவனை கொன்றிருக்கலாம் என ஊகித்தனர். அப்படியிருக்க வாய்ப்பில்லை. அந்தக் காலத்தில் மிகவும் பெறுமதிவாய்ந்த செம்புக் கோடரியை அவர்கள் எடுத்துப்போக வில்லை. வேறு சிலர் போரில் எதிரிக்குழுவினரிடம் மாட்டியிருக்கலாம் என்றனர். நரபலி என்ற கருத்துக்கூட இருந்தது. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
சமீபத்தில் National Geographic இதழ் இந்த மர்மத்தை விடுவித்திருக்கிறது. ஒட்ஸியின் உடலை எடுத்துப்போய் ஆராய்ச்சியாளர்கள் ஸ்கேன் செய்து பார்த்தார்கள். அவனுடைய இடது தோளில் முக்கியமான ரத்த நாளம் ஒன்று கல்முனை அம்பினால் துண்டாக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அவனை யாரோ அம்பு எய்து தாக்கியதால் ரத்தம் இழந்து இறந்துபோயிருக்கிறான். நரபலியும் இல்லை, பட்டினிச் சாவும் இல்லை, கொள்ளையும் இல்லை. கொலை என்பது நிச்சயமாகியிருக்கிறது. இப்படித்தான் விஞ்ஞானம் முன்னால் முன்னால் வளர அந்த அறிவை பின்னால் பின்னால் தள்ளிச் சென்று ஆராய முடிகிறது. ஆராய்ச்சி இத்துடன் முடியப் போவதில்லை. ஒட்ஸி மனிதனைப்பற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்துகொண்டேயிருக்கும். இன்னும் 100 வருடங்கள் கழித்து அவர்கள் மேலும் சில புது விசயங்களை கண்டுபிடிக்கலாம்.
ஒட்ஸி மனிதன் ஒரு பெண்ணை நேசித்தான். சில நாட்களில் தனக்கு சொந்தமாக்கிவிட்டான். அது இன்னொருவனுக்கு பொறாமையை கிளப்ப அவன் ஒட்ஸியை கொல்ல திட்டமிட்டு, அம்பெய்து கொன்றான். இந்த ஒட்ஸிக்கு அந்தப் பெண்ணிடம் இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களின் சந்ததி 140 தலைமுறையாக பல்கிப் பெருகி பரவி இன்றைக்கும் வாழ்கிறது. இந்தச் சந்ததியில் வந்த ஒருத்தன் இன்று நியூஸிலாந்திலும், பெண் ஒருத்தி ஆந்திராவிலும் வாழ்கிறார்கள். இப்படியெல்லாம் வருங்கால விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கக்கூடும்.
விஞ்ஞானம் ஒருவருக்காகவும் நிற்பதில்லை. அது தன் பாட்டுக்கு வளர்ந்து கொண்டே போகிறது. புதுப்புது கண்டுபிடிப்புகளும் புது விளக்கங்களும் வருவது இயற்கை. ஆனால் எப்பவும் பச்சை விளக்கு எரியும் என்று சொல்வதற்கில்லை. இடைக்கிடை சிவப்பும் விழும்.
END