கனகசுந்தரி

 

இப்படியொரு அவமானம் கனகசுந்தரிக்கு அவளுடைய 15 வயது வாழ்க்கையில் நடந்தது கிடையாது. இதற்கெல்லாம் காரணம் கறுப்பு ரீச்சர்தான். மற்றவர்கள் விமலா ரீச்சர் என்று அழைத்தாலும் அவளுக்கு அவர் கறுப்பு ரீச்சர்தான். எதற்காக தன் மீது வன்மம் பாராட்டுகிறார் என்று அவள் யோசித்திருக்கிறாள். ரீச்சர் வாய் திறக்கும்போது நாக்கு பிளந்திருக்கிறதா என்று உற்றுப் பார்த்திருக்கிறாள். கனகசுந்தரி அழகாக இருப்பாள். வெள்ளைவெளேரென்ற நிறம். அவள் நடந்துபோனால், ஆணோ பெண்ணோ நின்று திரும்பிப் பாராமல் நகரமுடிவதில்லை. ரீச்சர் வரமுன்னர் கனகசுந்தரிக்கு அந்த பள்ளிக்கூடத்தில் ஒரு மதிப்பு இருந்தது. தலைமையாசிரியர்கூட அவளைக் கண்டதும் தலையை ஆட்டி புன்னகை செய்வார். காலை வேளைகளில் அவள் பச்சை பாவாடை, மஞ்சள் பிளவுஸ் அணிந்து, இரட்டை பின்னல் பின்னி, பச்சை ரிப்பன் கட்டி கடவுள் வணக்கம் பாடும்போது வெகு அழகாக இருப்பதாக சிநேகிதிகள் சொல்லியிருக்கிறார்கள். அவள் பள்ளி வாழ்க்கையை கறுப்பு ரீச்சர் அன்றுடன் முடித்துவிட்டார்.

 

பள்ளிக்கூடம் விடுவதற்கு இன்னும் நேரம் இருந்தது. கனகசுந்தரி வீட்டுக்கு போகும் வீதியில் நடந்தாள். தூரத்தில் யாரோ ஒருத்தர் சைக்கிளில் புகையிலைச் சிப்பம் கட்டிக்கொண்டு போனார். அம்மாவுக்கு என்ன சொல்லித் தப்பலாம் என்பதை தீர்க்கமாக ஆலோசனை செய்தாள். கறுப்பு ரீச்சர் ஓணான்போல தலையை ஆட்டி ‘நீ உருப்படமாட்டாய்’ என்று திட்டியதை அவளால் மறக்க முடியவில்லை. வீதியின் அகலத்தையும் மீறிய கார் ஒன்று எதிர் திசையில் வந்தபோது கனகசுந்தரி வேலியோடு ஒட்டிக்கொண்டு நின்றாள். அது ஒரு ஹில்மன் மிங்ஸ் கார். அந்த ஊரில் அபூர்வமாகத் தென்படுவது. தன் கவலையை மறந்து கார் மறையும்வரை அதையே பார்த்தாள். அவள் மனம் காரின் பின்னாலேயே போய்விட்டது. உடனேயே தன் தங்கையிடம் இதைச் சொல்லவேண்டும் என நினைத்துக்கொண்டாள். அவளுடைய தங்கை பொது நிறம்.  அடிக்கடி தன் கையை அக்காவின் கையுக்கு பக்கத்தில் வைத்து ஒப்பிட்டு பார்த்துவிட்டு சொல்வாள். ‘அக்கா, உன்ரை கலர் வெள்ளைக்காரியின்ரை கலர். எங்கள் பள்ளிக்கூடத்திலே உன்னிலும் பார்க்க திறமான அழகி ஒருத்தரும் இல்லை.’

 

கனகசுந்தரிக்கு பத்து வயது நடந்தபோது கறுப்பு ரீச்சர் பள்ளிக்கூடத்துக்கு வந்து சேர்ந்தார். அன்றிலிருந்து எல்லாமே மாறியது. அவர் கணக்கு, சரித்திரம், தமிழ், வன்னவேலை, சமஸ்கிருதம் போன்ற பாடங்களை எடுத்தார். ’எழுத்தை எழுதிவிட்டு அதைக் கொடியில் காயப்போடுவதுதான் சமஸ்கிருதம்’ என்று கனகசுந்தரி கேலியாகச் சொல்வாள். கறுப்பு ரீச்சர்தான் பள்ளிக்கூடத்தில் ‘குட்டிப்போட்டு முந்துவது’ என்ற வழக்கத்தை கொண்டுவந்தார். வெளியே மாமரத்துக்கு கீழே அவர்களை வரிசையாக நிற்கவைத்து ரீச்சர் மனக்கணிதம் கேட்பார். தசம் இரண்டு தானத்துக்கு விடை கூறவேண்டும். சரியான விடை சொன்னால் பிழையாக சொன்னவர்களையெல்லாம் குட்டிவிட்டு வரிசையில் முன்னேறலாம். கனகசுந்தரிக்கு விடை தெரியவில்லை. விடைசொன்னவள் தடவுவதுபோல அவள் தலையில் குட்டிவிட்டு முன்னுக்குப்போய் நின்றாள். கறுப்பு ரீச்சர் எப்படிக் குட்டுவது என்று கனகசுந்தரியின்  தலையில் இடி இடிப்பதுபோல குட்டிக் காண்பித்தார். ரீச்சருக்கு தன்மீது எவ்வளவு வெறுப்பு என்பதை கனகசுந்தரி அன்று கண்டு கொண்டாள்.

 

கனகசுந்தரியின் வாழ்க்கையில் அரசர்களும் அரசிகளும் நிறையவே குறுக்கிட்டார்கள். அந்தச் சம்பவம் எட்டாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது. சில வருடங்களுக்கு முன்னர்தான் எலிஸபெத் மகாராணியின் முடிசூட்டு விழா நடந்திருந்தது. லண்டனில் யாருக்கோ முடிசூட்டினால் இந்த ரீச்சருக்கு என்ன வந்தது? ராணியின் முடிசூட்டு விழா பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். ‘வெள்ளைக்காரர்களின் ராணி  எலிஸபெத் அழகாயிருப்பார். அவருடைய முடிசூட்டு விழா 2 யூன் மாதம், 1953ம் ஆண்டு நடைபெற்றது’ என்று கட்டுரையை தொடங்கியிருந்தாள் கனகசுந்தரி. ரீச்சருக்கு அது பிடிக்கவில்லை. ‘அழகு என்பது தோல் நிறத்தில் இல்லை. கறுப்பானவர்கள் அழகாகவும், வெள்ளைக்காரர்கூட அழகில்லாமலும் இருக்கலாம். உதாரணத்துக்கு உலக அழகி கிளியோபாட்ரா. அவர் வெள்ளைக்காரியல்ல, ஓர் ஆப்பிரிக்கக்காரி.’ ரீச்சர் எத்தனை பெரிய உரை நிகழ்த்தினாலும் அவளுக்கு உண்மை தெரியும். ரீச்சர் கறுப்பு; அவள் வெள்ளை.

 

ஆனால் அவளை அன்று ரீச்சர் பள்ளியிலிருந்து துரத்திய காரணம் ஓர் அரசியால் உண்டாகவில்லை;  அரசனால்தான் வந்தது. இலங்கையை ஆண்ட பழங்காலத்து அரசன் வசபன். சரித்திரப் பாடம் என்பதால் இரவிரவாக கண்விழித்து தேதிகளைப் பாடமாக்கி வந்திருந்தாள் கனகசுந்தரி. ஆனால் கறுப்பு ரீச்சர் கேள்வியை மாற்றிவிட்டார். ’வசபன் எத்தனை குளங்கள் கட்டினான்? எத்தனை கால்வாய்கள் வெட்டினான்?’ என்பதுதான் கேள்வி. இதை யார் நினைவில் வைத்திருக்கப் போகிறார்கள்? சும்மா ஓர் எண்ணை சொல்லிவைத்தாள். ரீச்சர் கறுப்பு நாகம்போல அவளை கொத்த சமயம் பார்த்திருந்தார். ‘நீ முகத்துக்கு வெள்ளையடிச்சுக்கொண்டு வாற நேரத்திலே கொஞ்சம் சரித்திரமும் படிக்கலாமே’ என்று வைதுவிட்டு ‘ஏறு, ஏறு. வாங்கிலே ஏறி நில்’ என்றார். அவளுக்கு திகைப்பாய் இருந்தது. பெரிய பிள்ளையான பிறகு ஒருவரும் வாங்கில் ஏறி நிற்கச் சொல்வதில்லை. கனகசுந்தரி தயங்கி தரையை பார்த்தபோது மறுபடியும் ரீச்சர் ‘ஏறு. ஏறு, உனக்கு அப்பதான் புத்தி வரும்’ என்றார். கனகசுந்தரி பாவாடைய மடித்து ஒரு கையை பக்கத்து மாணவியின் தோளில் ஊன்றி வாங்கில் ஏறி நின்றாள். கூரையில் தலை இடித்துவிடும்போல அத்தனை உயரமாக தன்னை உணர்ந்தாள். உடம்பு கூசியது. ரீச்சர் கரும்பலகையில் ஏதோ எழுத திரும்பிய சமயம் கனகசுந்தரி பல்லைக் கடித்தபடி தன் சிநேகிதிகளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னாள். ‘இவவின்ர கறுப்பு நிறத்தை தாங்க ஏலாமல்தான் புருசன்காரன் ஓடிப்போனான்.’ இது எப்படியோ ரீச்சருக்கு கேட்டுவிட்டது. தீயை மிதித்ததுபோல சீறிக்கொண்டு திரும்பினார். விவகாரம் தலைமையாசிரியர்வரை போனது. இனிமேல் கனகசுந்தரியை பள்ளிக்கூடத்துக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

 

அவள் வீட்டுக்கு வரமுன்னரே தகவல் வந்துவிட்டது. அவளைக் கண்டதும் அம்மா தன் தலையில் தானே அடிக்கத் துடங்கினார். ‘உனக்கு வாயை வைச்சுக்கொண்டு சும்மா இருக்க ஏலாது’ என்று கதறினார். கனகசுந்தரி ஒன்றுமே பேசவில்லை. ’ஐயா வந்ததும் அவரைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு போ’ என்றார். ‘என்னை வெட்டிக் கொன்றாலூம் போகமாட்டேன்’ என்றாள் கனகசுந்தரி. ’நீதானே ரீச்சருக்கு படிக்கவேண்டும்’ என்று சொன்னாய்.’ ’அதுவும் ஒரு வேலையா? 2000 வருடத்துக்கு முன்னர் எத்தனை குளம் வெட்டினால் என்ன? அதிலே ஒன்றுகூட இன்றைக்கு இல்லை. அந்தக் காலத்து மக்கள் எத்தனை வேளை சாப்பிட்டார்கள்? அந்தப்புரத்தில் எத்தனை அடிமைகள் சிறை கிடந்தார்கள்? இதைத் தெரிந்தாலாவது பிரயோசனமாய் இருக்கும்.’ ‘இப்ப என்ன செய்யப் போறாய்?’ என்றார் தாயார் அதிர்ந்துபோய். ’‘வேறு என்ன? நான் கல்யாணம் செய்யப்போறன். சுருக்காய் எனக்கு மாப்பிளை பாருங்கோ’ என்றாள்.

 

தங்கச்சிக்காரி பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் இருவரும் ஒன்றுமே நடக்காததுபோல ஒழுங்கையில் போய் நின்று கொண்டார்கள். தங்கை வழக்கம்போல கையிலே நோட்டுப்புத்தகத்தை எடுத்துக்கொண்டு,  வாயிலே குருவி துரும்பு காவுவதுபோல குறுக்காக பென்சிலை வைத்துக்கொண்டு புறப்பட்டாள். ’எத்தனை நம்பர் எழுதியிருக்கிறாய்?’ என்றாள் அக்காக்காரி. தங்கை 116 என்று சொன்னாள். அவளுடைய தங்கையின் பொழுதுபோக்கு கார் நம்பர்கள் எழுதுவது. அவள் வகுப்புக்காரிகள் எல்லோரும் எழுதினார்கள். குறுகலான  வீட்டு ஒழுங்கையில் அபூர்வமாகவே கார் வரும். அவள் சிநேகிதிகளில் ஒருத்தி 247 கார் நம்பர்கள் எழுதிவிட்டாள். அவர்கள் ஊரில் காணக்கிடைப்பது இரண்டே இரண்டு வகை கார்தான். ஒன்று ஒஸ்டின் 40, அடுத்தது மொறிஸ் மைனர். எப்போதாவது ஹில்மன் மிங்ஸ் கார் வரும். அப்பொழுது கனகசுந்தரி துள்ளிக் குதிப்பாள். நீளமான முன்பக்கமும், மயில் தோகையை குறுக்காக வெட்டிவிட்டதுபோன்ற பின்பக்க தோற்றமும் கொண்டது அது. ஓர் அரசி உலா போவதற்கு தகுதியான கார் என்று ஆதங்கப்படுவாள். அன்று மதியம் தான் கண்ட ஹில்மன் மிங்ஸை வர்ணிக்கத் தொடங்கினாள். அவள் தங்கை பரவசநிலையை எய்திவிட்டதுபோல கேட்டுக்கொண்டிருந்தாள்.

 

ஒருநாள் இரண்டு பேரும் ஒழுங்கையில் கார் நம்பர்கள் எழுதிக்கொண்டு நின்றபோது தூரத்தில் கறுப்பு ரீச்சர் வருவது தெரிந்தது. ஒரு கையில் புத்தகத்தை காவியபடி மறுகையால் குடையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு நடந்தார். தரையை பார்த்தபடி நடந்த அவருக்கு முன்னால் அவருடைய நிழல் நடந்து போனது. தங்கச்சி நினைத்தாள் அவளுடைய அக்கா வீட்டுக்குள் ஓடிவிடுவார் என்று. அப்படியெல்லாம் நடக்கவில்லை. ரீச்சர் அவர்களை சமீபித்து நிமிர்ந்து பார்க்காமலே தாண்டிப் போனார். அந்தச் சமயம் கனகசுந்தரி தேன் தடவிய குரலில் ‘ரீச்சர் குடையை விரிச்சுப் பிடியுங்கோ. கறுத்துப் போவீங்கள்’ என்றாள். ரீச்சரின் உடம்பில் பாய்ந்த அத்தனை ரத்தமும் முகத்தில் ஏறி அது குரூரமாக மாறியது. எரிப்பதுபோல நிமிர்ந்து பார்த்தார். பின்னர் கிடுகிடுவென அந்த இடத்தை விட்டு அகன்றார்.

 

இதைக் கேள்விப்பட்ட அம்மாவுக்கு கோபம் உச்சத்துக்கு போனது. ‘நீ வெள்ளை என்ற கர்வம் உனக்கு தலைக்கு ஏறிவிட்டது. உன்ரை வாயைப் பற்றி இந்த ஊரிலே எல்லாருக்கும் தெரியும். அடுத்த ஊருக்கும் தெரியும். அதற்கடுத்த ஊருக்கும் தெரியும். உன்னை ஆர் கட்ட வரப்போகினம். உன்ரை ஐயா ஒன்றுமே சேர்த்து வைக்கவில்லை. நீ இப்படியே கார் நம்பர்களை உன்ரை தங்கச்சிபோல எழுதிக்கொண்டிரு. புருசன் வந்து குதிப்பான்’ என்று திட்டினார். அம்மா சொன்னது முற்றிலும் பொய் என்பது விரைவிலேயே நிரூபணமானது. பொம்பிளை பார்க்க பக்கத்து ஊரிலிருந்தும், அதற்கடுத்த ஊரிலிருந்தும் இன்னும் பெயர் தெரியாத பல ஊர்களிலுமிருந்தும் ஆட்கள் வந்தார்கள். கனகசுந்தரியின் அழகு அவ்வளவு பிரசித்தமானது. அவள் ஒரேயொரு நிபந்தனைதான் வைத்தாள். ’மாப்பிளை ரோட்டுக்கூட்டும் ஆளாகக்கூட இருக்கலாம், ஆனால் வெள்ளையாக இருக்கவேண்டும்.’

 

கனகசுந்தரி மாப்பிள்ளையை வணங்கிவிட்டு கடையில் வாங்கிய வடையையும் வாழைப்பழத்தையும் பரிமாறுவாள். வடை, வாழைப்பழத்தை பிடிக்கவில்லை என்று சிலர் சொன்னாலும் ஏக மனதாக எல்லோருமே ’பெண் பிடித்திருக்கிறது’ என்றார்கள். ஆனால் சீதனக்கதை வந்தபோது பேச்சு முறிந்தது. பத்து பவுண், இருபது பவுண் அத்துடன் ரொக்கம் என்று வாய் கூசாமல் கேட்டார்கள். ஒருநாள் இரவு அவசரமாக ஒரு குடும்பம் 75 மைல் தொலைவில் உள்ள வவுனியாவில் இருந்து வந்து பெண் பார்த்தது. கனகசுந்தரி மேல்கண்ணால் ஒரேயொரு முறை பார்த்தாள், மாப்பிள்ளை மயங்கிவிட்டார். சீதனத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. கல்யாணச் செலவு முழுவதையும் அவர்களே ஏற்பதாகவும் சொன்னார்கள். ஆனால் பிரச்சினை என்னவென்றால் மாப்பிள்ளை நெட்டையாக, கறுப்பாக இருந்தார். அவர் வவுனியாவில் நாலு லொரிகள் சொந்தமாக வைத்திருந்தார். கொழும்புக்கு சரக்கு ஏற்றுவதும் அங்கிருந்து கொண்டுவந்து இறக்குவதுமாக நல்ல வியாபாரம். கனகசுந்தரி வாழ்நாள் முழுக்க வசதியாக வாழலாம். அனைவரும் திடுக்கிடும் விதமாக கனகசுந்தரி சம்மதம் தெரிவித்தாள். மாப்பிள்ளையிடம் சொந்தமாக ஒரு ஹில்மன் மிங்ஸ் கார் இருந்ததுதான் காரணம் என்பது பலருக்கு தெரியாது. காரின் நம்பர் EL 1548. கூட்டிப் பார்த்தபோது 9 வேறுவந்தது. அது அவளுடைய இலக்கம்.

 

இரண்டு நாளிலே கல்யாண எழுத்து முடிந்தது. மூன்று மாதத்தில் திருமணம் என்று முடிவானதும் மாப்பிள்ளை வவுனியாவுக்கு திரும்பினார். அவருக்கு காதல் கடிதம் எழுத வராது. முழுக்க முழுக்க கடிதத்தில் சினிமாப் பாடல் வரிகள்தான். ’உன்னைக் கண் தேடுதே’ என்று அவர் எழுத  ’புதுப்பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே’ என்று அவள் எழுதினாள். அவர் ‘புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே’ என்று எழுதினால் அவள் ‘நீதானே எனை அழைத்தது’ என்று எழுதி தன் சினிமாப் புலமையை காட்டினாள். ஒரேயொரு தடவை அவர் எழுதியதைப் படித்து வியந்துபோய் அந்தக் கடிதத்தை கனகசுந்தரி பத்திரப்படுத்தினாள். ‘ஒரு பூவைப் பார்த்து 1000 பேர் இன்புறுவார்கள். ஓர் ஓவியத்தை பார்த்து 1000 பேர் களிப்பார்கள். ஆனால் உன் அழகு பார்ப்பவர் எல்லோருக்கும் துன்பம் தருவது. அது இன்பம் தரப்போவது எனக்கே எனக்கு மட்டும்தான்.’

 

வீதியை மறைத்து பந்தல் போட்டு நாலு கூட்டம் மேளம் பிடித்து வெகு விமரிசையாகத்தான் திருமணம் நடந்தது. இரவு பகலாக ஒலிபெருக்கியில் சினிமாப் பாடல்கள் முழங்கின. கனசுந்தரிக்கு உச்சிப்பட்டம், இரட்டை வடம் சங்கிலி, தங்க வளையல்கள், ஒட்டியாணம், நெக்லஸ் என்று மாப்பிள்ளை வீடு கொடுத்த ஆபரணங்களை பூட்டி அழகு பார்த்தார்கள். நகைகள் அவள் உடல் அழகை மறைத்தனவே ஒழிய கூட்டவில்லை. கனகசுந்தரியின் தாயார் தனக்குச் சொந்தமான ஒரேயொரு சிவப்புக் கல் அட்டியலை கொண்டுவந்து மகளுக்கு பூட்டியபோது அதை உடனே கழற்றி தங்கைக்கு அணிந்து ’இது உனக்கு’ என்றாள்.

 

தாலி கட்டிய பின்னர் புருசனோடு புறப்படும் நேரம் வந்தபோது ஆச்சரியப்படும் விதமாக கனகசுந்தரி கதறி அழுதாள். தாயாரிடம் ‘அம்மா என்னை மன்னித்துவிடு. அறிவில்லாமல் நடந்துகொண்டேன்’ என்று விம்மினாள். தகப்பனாரின் காலில் விழுந்து வணங்கினாள். தங்கையை கட்டிக்கொண்டு மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்து அழுதாள். அடுத்த நாள் காலையே கணவனுடன் அவள் வவுனியாவுக்கு புறப்பட்டுவிடுவாள். அவர்கள் முதலிரவு மாமியார் வீட்டில் அன்று நடக்கும். மாலையும் கழுத்துமாக புதுத் தம்பதிகள் காரில் ஏறி அமர்ந்ததும் சாரதி காரை எடுத்தார். சிறுவர்கள் காரை தொடர்ந்து சிறிது தூரம் ஓடி வழியனுப்பினார்கள்.

 

அடுத்த நாள் தம்பதிகள் வவுனியாவுக்கு புறப்பட்டார்கள். ஒரு முழு இரவை கணவனுடன் கழித்துவிட்ட கனகசுந்தரி செல்லமாக ’டிரைவர் வேண்டாம், நீங்களே காரை ஓட்டுங்கள்’ என்றாள். புருசன் பக்கத்தில், இங்கிலாந்திலிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட ஹில்மன் மிங்ஸ் காரில், முன் சீட்டில் அவள் உட்கார்ந்திருக்கிறாள் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. இரண்டு வர்ணம் பூசிய கார் அது. மேல்பாதி வெள்ளை, கீழ்ப்பாதி அடர் பச்சை. யாழ்ப்பாணம் முழுக்க தேடினாலும் அப்படி அற்புதமான கார் கிடைக்காது. காரை அந்த ஒடுக்கமான ஒழுங்கைகளுக்கு பொருந்தாத வேகத்தில் கணவன் ஓட்ட கனகசுந்தரி சுகத்தை அனுபவித்து கால்களை அகட்டி வைத்து, கைகளைப் பரப்பி உட்கார்ந்திருந்தாள். காரின் தரையிலிருந்து எழும்பிய அதிர்வு அவள் கால்கள் வழியாக மேலே ஏறியது. அந்த நேரத்திலும் அவளால் கறுப்பு ரீச்சரை மறக்க முடியவில்லை. ‘உருப்படாமல் போவாய்’ என்று அவர் சாபமிட்டதை நினைத்து சொண்டுக்குள் சிரித்தாள். கணவனின் உதட்டில் ஒரு பக்கத்தில் சிகரெட் தொங்க, மறுபக்கத்தில் வெண்புகை நூலாக எழும்பிய காட்சி பார்ப்பதற்கு அவளுக்கே பெருமையாக இருந்தது. வீடு போய்ச் சேரும்வரைக்கும் சிகரெட் முடியக்கூடாது என்று பிரார்த்தித்தாள். ‘போகும் வழியில் அம்மாவை பார்த்துவிட்டு போகலாம்’ என்றாள். மறு பேச்சில்லாமல் கணவன் காரை திருப்பினான்.

 

காலையில் வாசலில் கார் வந்து நின்றதும் அயல் வீட்டுச் சனங்கள் காரை சூழ்ந்து கொண்டார்கள். சிறுவர்கள் உள்ளுக்கு எட்டி எட்டிப் பார்த்தார்கள். கணவனை வரவேண்டாம் என்று கண்களால் சைகை காட்டிவிட்டு இறங்கி, பொற்கிரீடம் விழுந்துவிடும் என்பதுபோல் தலையை உயர்த்தி வீட்டினுள்ளே புகுந்தாள். தூங்கிய தங்கச்சியை காலால் தட்டி எழுப்பி சிவப்புல் கல் அட்டியலை பறித்து தானே அணிந்து கொண்டாள். கனகசுந்தரியின் தாயும் தகப்பனும் பின்னாலே தீக்கோழிகள்போல ஓடி வந்தார்கள். அவள் திரும்பிப் பார்க்கவில்லை. ஒரு வார்த்தை பேசவும் இல்லை. நீச்சல்காரர் தண்ணீரைக் கிழிப்பதுபோல சனங்களை பிளந்துகொண்டு போய் கார் முன் சீட்டில் ஏறி அமர்ந்து ஒருநாள் புருசனிடம் ‘காரை எடுங்கள்’ என்று உத்தரவிட்டாள். பின்னர் கண்ணாடி வழியாகப் பார்த்து நீண்ட வெள்ளைக் கையுறை அணிந்த எலிஸபெத் மகாராணி செய்வதுபோல கையை அசைத்தாள். கார் கிளம்பியதும் அதைத் தொடர்ந்து சிறுவர்கள் ஓடினார்கள். கார், அது கிளப்பிய புழுதியில், மறைந்தது. சிறிது நேரத்தில் சிறுவர்களும் மறைந்தார்கள்.

 

END

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta