ஒரு வாரம்

ஒரு வாரம்

 

அ.முத்துலிங்கம்

 

விருது

 

சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவுக்கு போயிருந்தேன். பலவிதமான பரிசுகளும், விருதுகளும் வழங்கினார்கள். எல்லாமே மகிழ்ச்சியான விசயம்தான். ஒருவரைப் பாராட்டுவது எப்போதுமே வரவேற்கப்படவேண்டிய நிகழ்ச்சிதான்.

 

ஒருவருக்கு அவருடைய அதீத வணிக வளர்ச்சியை பாராட்டி விருது வழங்கினார்கள். சென்ற வருடம் அவருடைய லாபம் 3 மில்லியன் டொலர்கள் மட்டுமே. நடப்பு வருடம் அவருடைய லாபம் 10 மில்லியன் டொலர்கள். ஒரு வருடத்திலே லாபத்தை மூன்று மடங்காகப் பெருக்கியிருக்கிறார். அசுர சாதனை. நிச்சயம் பாராட்டம் படவேண்டியவர்தான்.

 

இப்படியான வணிக மேதைகளைப் பார்க்கும்போது மெலிண்டாவையும், பில் கேட்சையும் நினைத்துக்கொள்வேன். உலகத்திலேயே அதிக செல்வம் சேர்த்தவர்கள் இந்த தம்பதியினர்தான். அதிக கொடை வழங்கியவர்களும் இவர்களே. அவர்கள் சமீபத்தில் சொன்னார்கள். ‘நீங்கள் ஈட்டிய பொருளை உங்களுடன் எடுத்துப் போகமுடியாது. உங்களுடைய அதியற்புதமான மூளை செல்வத்தை பெருக்கியிருக்கிறது. அதே மூளையை ஈகையின் பின்னால் நிறுத்தினால் உலகத்தில் ‘இருப்பவர் – இல்லாதவர்’ என்ற வேறுபாடு வெகுவாக மறைந்துபோகும்.

 

மேலே குறிப்பிட்ட விருது வாங்கியவர் நடப்பு வருடத்தில் எவ்வளவு நன்கொடை வழங்கினார் என விசாரித்தேன். ஒருவருக்கும் தெரியவில்லை.

 

இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

 

சில காலத்துக்கு முன்னர் படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோன் லண்டனில் பொதுமக்களோடு பாதாளரயிலில் சாதாரணமாகப் பயணம் செய்தார். அவருக்கு அமர இருக்கை கிடைக்காததால் நின்றபடியே பயணம் செய்யவேண்டி நேர்ந்தது. அவருக்கு பக்கத்தில் ஒருவர் அமர்ந்து தூங்கினார். இன்னொருவர் பேப்பர் படித்தார். பாவம், பிரதமரை யாருமே கவனிக்கவில்லை. ஒருவரும் அவருக்கு இருக்கைதர முயலவும் இல்லை. ஒரேயொரு இந்தியப் பெண்மணி அவரை அணுகி ’நீங்கள் இந்த நாட்டுப் பிரதமரா?’ என்று கேட்டார். அவர் ஆமாம் என்றார். அவசரமான ஒரு கூட்டத்திற்கு அவர் சென்றார். காரிலே வீதியில் பயணித்தால் நேரத்துக்கு போகமுடியாது. அதுதான் பாதாள ரயிலை தெரிவு செய்ததாகச் சொன்னார்.

 

நேற்று நான் ரிம்ஹோர்ட்டன் கோப்பிக் கடையின் நீண்ட வரிசையில் நின்றேன். வெள்ளைக் கோட்டு அணிந்து, ஸ்டெதஸ்கோப் மாட்டிய ஒருவர் அவசரமாக வந்து வரிசையில் சேர்ந்தார். டேவிட் கமரோனுக்கு நடந்தது நினைவுக்கு வந்தது. டொக்டருக்கு என்ன அவசரமோ? நான் என் இடத்தைக் கொடுத்தேன். அவர் மறுத்துவிட்டார். நான் சொன்னேன். ’எனக்கு போதிய நேரம் இருக்கிறது. நான் வேலை இல்லாத ஆள். உங்களுக்கு நேரம் முக்கியம்.’ அவர் சொன்னார். ’நாங்களும் காத்திருக்கப் பழகவேண்டும். நோயாளிகள் எங்களுக்காக் காத்திருக்கிறார்கள் அல்லவா?’ நான் அவர் சொல்லைக் கேட்காமல் அவருக்கு பின்னாலே போய் நின்றேன். அவர் அதை தடுக்க முடியாதல்லவா?

 

அவர் என்ன துறையில் மருத்துவராக இருக்கிறார் என்று கேட்டேன். ’பேஸ்மேக்கர் (இருதய முடுக்கி) பொருத்துவது’ என்றார். காலையில் இரண்டு பேருக்கு இருதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்தியிருக்கிறார். பின் மதியம் கோப்பி குடித்தபின்னர் இன்னொருவருக்கு செய்யவேண்டும் என்றும் சொன்னார். அறுவைச் சிகிச்சை செய்துதான் வழக்கத்தில் இதைப் பொருத்துவார்கள். ஆனால் சமீபத்தில் செய்தித்தாள்களில் ஒரு செய்தி வந்தது. ’அமெரிக்காவில் அறுவை சிகிச்சை இல்லாமலே ஒரு நுண்ணிய பேஸ்மேக்கரை ரத்தக் குழாய் வழியாக இருதயத்துக்குள் செலுத்தி வெற்றிகரமாகப் பொருத்திவிட்டார்களாம். உண்மையா?’ என்றேன். ’அதுசரிதான். அந்த தொழில்நுட்பம் விரைவிலேயே கனடாவுக்கும் வந்துவிடும்’ என்றார்.

 

’உங்கள் தொழிலில் பிரச்சினைகள் உண்டா?’ அவர், ’உயிரோடு இருப்பவர்களால் பிரச்சினை இல்லை. இறந்தவர்களினால்தான் பிரச்சின’ என்றார். எனக்கு ஆச்சரியம். ’அது எப்படி இறந்தவர்களினால் பிரச்சினை?’ அவர் சொன்னார். ’பேஸ்மேக்கர் பொருத்திய ஒருவர் இறந்ததும் அவரை அப்படியே புதைத்து விடுகிறார்கள். இருதயம் வேலைசெய்வதை நிறுத்திவிடும். ஆனால் பேஸ்மேக்கர் துடித்தபடியே இருக்கும். மனிதரின் வாழ்நாள் முடிந்தாலும் பேஸ்மேக்கர் அதன் வாழ்நாள் முடியுமட்டும் துடிக்கும்.’

 

அவர் முறை வந்தது. கோப்பியை வாங்கிக்கொண்டு போனார். ’இருதயம் கனிந்த வாழ்த்துக்கள்’ என்றேன். திரும்பாமலே கோப்பிக் குவளையயை உயர்த்திக் காட்டிவிட்டு மறைந்தார்.

 

100 டொலர்.

 

கண் வைத்தியரிடம் செல்வதில் சில அனுகூலங்கள் இருக்கத்தான் செய்கின்றன. என்னுடைய கண் வைத்தியர் பிரபலமானவர். யார் சொன்னது? அவர்தான். ரொறொன்ரோவிலேயே நோயாளிகளால் அதிகம் வேண்டப்படும், உடல்நல சஞ்சிகைகளால் தொடர்ந்து போற்றப்படும் ஒரே மருத்துவர். அதில் சந்தேகமே இல்லை.

 

அவரிடம் காலை 9 மணிக்கு போனால் 11 மணிக்கு அவருடைய உதவியாளர் உங்களைக் கூப்பிட்டு கண்ணை பரிசோதிப்பார். 12 மணிக்கு இன்னொருவர் வேறுவிதமான பரிசோதனைகள் மேற்கொண்டு சில குறிப்புகளை பதிவார். ஒரு மணிக்கு இன்னொரு பெண்மணி இருட்டு அறையில் கம்புயூட்டரில் ஓடும் பச்சை நிற நட்சத்திரங்களை  எண்ணச் சொல்வார். அப்படியும் ஒரு சோதனை. இப்படியாக முன்னேறி 3 மணிக்கு கண்மருத்துவர் என்னைப் பரிசோதிக்க தயாராக இருப்பார். பல அடுக்குகளைத் தாண்டி இப்படி காத்திருக்கும்போது காளமேகப் புலவருடைய பாடல் ஒன்று நினைவுக்கு வரும். அவர் சத்திரத்தில் இரவு உணவுக்காக காத்திருந்தபோது ஒருமுறை விடிவெள்ளி தோன்றிவிட்டதாம். அப்போது அவர் வயிறெரிந்து பாடிய பாடல் இது:

 

        கத்துக் கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

        அத்தமிக்கும் போதில் அரிசி வரும் – குத்தி

        உலையில் இட ஊரடங்கும் ஓர் அகப்பை அன்னம்

        இலையில் இட வெள்ளி எழும்.

 

இப்படியெல்லாம் காக்கவைத்து சோதித்து எழுதித் தந்ததுதான் கடந்த 6 மாதங்களாக நான் அணிந்த கண்ணாடி. ஒரு வாரம் சென்ற பின்னர் கண்ணாடி கடைக்காரரிடம் சென்று ’இரண்டு இரண்டாகத் தெரியுது. கண்ணாடி சரியில்லை’ என்று சொன்னேன். அவர் நம்பவில்லை. ’கண்ணாடி புதிது. கண் பழையது. பழகப் பழக சரி வரும்’ என்றார் நடிகர் தனுஷ் சொல்வதுபோல. ஆனால் சரியாகவில்லை. யூட்யூப் பார்க்கும்போது இரண்டு இரண்டாகத்  தெரிந்தது. விஜய் நடித்த படம் ஒன்றில் விஜய் நடனமாடினார். இரண்டு விஜய் தெரிந்தனர். நான் இரட்டை வேடம் என்று நினைத்தேன். அப்படியில்லை என்று பின்னர் தெரிந்தது. ஒருமுறை மனைவி கடைக்கு சாமான் வாங்கச் சென்றபோது 200 டொலர் கொடுத்தேன். மனைவி ‘இல்லை இது 100 டொலர்’ என்று சொன்னபோதுதான் விசயம் எத்தனை சீரியஸ் என்று புரிந்தது.

 

மறுபடியும் கண் மருத்துவரிடம் முறைப்பாடு செய்யச் சென்றேன். அன்று அவ்வளவு சனமில்லை. காலை 9 மணிக்கு சென்று மாலை 4 மணிக்கே மருத்துவரை பார்த்துவிட்டேன். சிலவேளை இப்படி அதிர்ஷ்டம் அடிப்பதுண்டு. மருத்துவரிடம் ’எல்லாமே இரண்டு இரண்டாக தெரிகிறது. கண்ணாடியில் ஏதோ பிழை’ என்றேன். அவர் மீண்டும் பரிசோதனைக் குறிப்புகளைப் பார்த்தார். என் கண்களின் அளவுகளுக்கும் கண்ணாடிக்கும் சம்பந்தமே கிடையாது. ’இது எப்படி நேர்ந்தது?’ என்று வியக்கக்கூட இல்லை. புதுவித அளவுகள் எழுதித்தந்து புதுக்கண்ணாடி பெறும்படி சொன்னார். மருத்துவர் வாயிலிருந்து ஒன்றிரண்டு வார்த்தைகள் வரும், வரும் என்று  எதிர்பார்த்தேன். ‘தவறு நேர்ந்துவிட்டது, மன்னியுங்கள்.’ அது வரவே இல்லை.

 

இப்பொழுது புதுக்கண்ணாடி அணிந்து இருக்கிறேன். 100 டொலர் தாள் 100 டொலர் தாளாகவே தெரிகிறது. எத்தனை பெரிய அதிசயம்? கண் மருத்துவ விஞ்ஞானத்தின் அதிவேக வளர்ச்சியை நினைக்கும்போது புல்லரிக்கிறது.

 

கடவுளுக்கு வேலைசெய்பவர்

 

சில மருத்துவ உப கரணங்களை வாங்குவதற்காக  நானும் மனைவியும் மருத்துவர் பரிந்துரைசெய்த அதே கடைக்கு சென்றோம். ஆச்சரியமாயிருந்தது. அங்கே வேலை செய்த அத்தனைபேரும் 70 வயதை தாண்டியவர்களாக இருந்தார்கள். நத்தை வேகத்தில் நடந்தார்கள். ஆமை வேகத்தில் ஆட்களை கவனித்தார்கள். ஒருவருடன் ஒருவர் முகத்துக்கு கிட்ட வந்து ரகஸ்யம் பேசுவதுபோல கதைத்தார்கள். கம்புயூட்டரை திறந்து ஒவ்வொரு எழுத்தாக தேடி குத்தி குத்தி பதிந்தார்கள். சரி இன்றைக்கு இங்கே அரைநாள் கழியும் என்று மனதுக்குள் நினைத்தபோது ஒரு மூதாட்டி தரையை தேய்த்தபடி எங்களிடம் வந்தார். நான் சீட்டைக் கொடுத்தேன். அதிலே எல்லா விவரமும் எழுதியிருந்தது. மூதாட்டி ஒவ்வொரு பொருளாகக் கொண்டு வந்து எங்கள் முன் வைத்தார். சில பொருட்களைப் பூட்டவேண்டும். அவற்றை எடுத்துச் சென்று பூட்டியபின் மீண்டும் கொண்டு வந்தார். எல்லாம் நிறைவேறிவிட்டது. கடைசியில் பில் போடும் வேலை. மூதாட்டி கம்புயூட்டரின் முன் உட்கார்ந்து பொருள்களை பதியத் தொடங்கினார். பாதியிலே நிறுத்தி சொன்னார் ’100 டொலர்களுக்கு மேல் வாங்கினால் 20 டொலர் கழிவு.’ நல்லது என்றேன். ’மொத்தத் தொகை 235 டொலர்’ என்றார். நான் பணத்தைக் கட்ட தயாரானேன். அவரோ என்னை உற்றுப் பார்த்தபடியே அசையாது அமர்ந்திருந்தார். மறுபடியும் சொன்னார் ‘100 டொலர்களுக்கு வாங்கினால் 20 டொலர் கழிவு.’ என் மூளை பிரகாசிக்கவில்லை. அப்படியே நின்றேன். அவருக்கு புரிந்துவிட்டது. இந்த மக்கு மனிதருக்கு 10 தடவை சொன்னாலும் புரியாது என்று. என்னைப் பார்த்து வாய்க்கு கிட்டவாக வந்து ரகஸ்யக் குரலில் சொன்னார். ’பில்லை இரண்டாகப் பிரிக்கலாம். அப்பொழுது உங்களுக்கு இரண்டு 20 டொலர் கழிவு கிடைக்கும். மொத்தம் 40 டொலர்.’ ‘அப்படியா, நன்றி’ என்றேன்.

 

பணத்தை கட்டிவிட்டு மூதாட்டியிடம் விடை பெறும்போது கேட்டேன். ’நீங்கள் யாருக்காக வேலை செய்கிறீர்கள்? கம்பனிக்காகவா வாடிக்கையாளருக்காகவா?’

அவர் சொன்னார் ‘கடவுளுக்காக.’  

 

 

நல்ல செய்தி

 

அமினாட்டா ஃபோர்னா என்பவர் இங்கிலாந்தில் வாழும் ஓர் ஆப்பிரிக்க எழுத்தாளர். இவரைப் பத்து வருடங்களுக்கு முன்னர் நேர்காணல் செய்திருக்கிறேன். இவர் எழுதிய புத்தகம் The Devil that Danced on Water. இந்தப் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தது. அதற்கு பல காரணங்கள். இந்த நாவலின் கதை நிகழ்ந்த இடம் சியாரா லியோன். அங்கே நான் வாழ்ந்த காலத்தில் நடந்த கதை. இந்த நாவலில் எழுதப்பட்ட ஒவ்வொரு வசனமும் செதுக்கப்பட்டிருக்கும். முதல் நாவல் என்றபடியால் ஆசிரியர் எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதன் பிறகு 3 நூல்கள் எழுதினார். அவை என் மனதை அவ்வளவாகக் கவரவில்லை. இப்பொழுது கொரேசியா நாட்டின் பின்னணியில் இவர் எழுதிய The Hired Man என்ற நாவல் வெளிவந்திருக்கிறது. இதை மின்நூலாக வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் முடிக்கவில்லை. இன்று செய்தி படித்தேன் இவருக்கு Windham – Campbell Award அமெரிக்காவில் கிடைத்திருக்கிறது. பரிசுத் தொகை 150,000 டொலர்கள். ஓர் எழுத்தாளருக்கு இது எத்தனை பெரிய தொகை. அவருக்கு உடனேயே வாழ்த்துக் கடிதம் போட்டேன். பதில் கிடைத்திருக்கிறது. எனக்கே பரிசு கிடைத்ததுபோல மகிழ்ச்சியாக உள்ளது.

 

 

நேரமில்லை

 

ஒரு கவிஞரைச் சந்தித்தேன். பல வருடங்களுக்கு முன்னர் அருமையான கவிதைகள் எழுதி பாராட்டப்பட்டவர். ’ஏன் இப்போழுதெல்லாம் கவிதைகள் எழுதுவதில்லை?’ என்று கேட்டேன். ‘நேரமில்லை’ என்று சொன்னார்.

 

சில கவிதைகளை திரும்பத் திரும்பப் படிக்கலாம். ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதிதாக ஏதாவது மனதிலே தோன்றும்.  சமீபத்தில் வெளியான சில்வியா பிளாத்தின் கவிதைகள் மொழிபெயர்ப்பை தமிழில் படித்தேன். கீதா சுகுமாரன் மொழிபெயர்த்திருக்கிறார். ‘ரயில் ஒரு கோடாக மூச்சு விடுகிறது’ என்றவரி ஆங்கில வரியிலும் பார்க்க சிறப்பாக அமைந்திருப்பதாக எனக்குப் பட்டது. பலமுறை படிக்கலாம். 

 

ஹைக்கூ ஜப்பானிய வகைக் கவிதை. சொல்லவேண்டியதை 18 அசைவில் சொல்லி முடித்துவிட வேண்டும். 300 வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட கவிதை வகைப்பாடு இன்று உலகம் முழுக்க பரவிவிட்டது. அந்தக் காலத்து ட்விட்டர் என்று இதைச் சொல்லலாம்.

 

ஐரோப்பிய கவுன்சில் என்பது 28 நாடுகளின் பிரத மந்திரிகளை அங்கத்தவர்களாகக் கொண்டது. 28 நாட்டு தலைவர்களுக்கும் ஒரு தலைவர் உண்டு. முன்னாள் பெல்ஜியம் நாட்டு பிரதம மந்திரி ஹேர்மன் வான்ரோம்பு இந்தக் கவுன்சிலுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இத்தனை பொறுப்பான உத்தியோகத்தில் இருந்தாலும் இவர் ஹைக்கூ கவிதை எழுதுவதை நிறுத்தவில்லை. ’பிஸியாக இருக்கிறேன்’ என்று இவர் சொன்னதே கிடையாது. இதுதான் இவர் எழுதிய கவிதை:

 

        வேலையில் மூழ்கியுள்ளேன்

        கோதுமை அதே சமயம் வளர்கிறது

        இன்னும் உயரமாக.

 

’எனக்கு நேரமில்லை’ என்று சொல்லும் தமிழ் கவிஞருக்கு இதை படிக்கக் கொடுக்கவேண்டும்.

 

 

பணக்காரன்

 

என்னுடைய வங்கிக்கு போனேன். யன்னலில் ஒரு புதுப் பெண் உட்கார்ந்திருந்தார். நெஞ்சு சட்டையில் ‘பயிலுநர்’ என்று குத்தியிருந்தது. வங்கி நடப்புகளை பயில்வதற்காக புதிதாக நியமிக்கப் பட்டிருந்தார். இவர் பயிற்சியில் வெற்றி பெற்றால் இவரை நிரந்தரமாக்குவார்கள் என்று நினைக்கிறேன். என்னைக் கண்டதும் பயிற்சி சிரிப்பை வெளியே விட்டார். எப்படிச் சிரிப்பது என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். பளிச்சென்று எல்லா பற்களும் மின்னின. என்னுடைய பல் வைத்தியர் ஞாபகத்துக்கு வந்தார். அவர் சொல்லுவார். ‘ஐயா, எல்லாப் பற்களையும் நீங்கள் சுத்தம் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை. எதற்காக மெனக்கெட வேண்டும். எந்த எந்த பற்கள் தேவையோ அவற்றை மட்டும் சுத்தம் செய்தால் போதும்.’ இந்தப் பெண்ணுக்கு எல்லாப் பற்களும் தேவையாக இருக்கும்போல என்று பட்டது.

 

’உங்களுக்கு நான் இன்று எப்படி உதவலாம்?’ ஒவ்வொரு சொல்லையும் மனனம் செய்த ஒருவர் உச்சரிப்பதுபோல, கனடாவின் குப்பை வண்டி போல நிறுத்தி நிறுத்தி சொன்னார். ’உங்கள் பெயர் தெரியவில்லையே?’ என்றேன். அவர் ’அநுபமா’ என்றார். பயிற்சியில் இருப்பவர் என்பதால் அவருக்கு இப்போது பெயர் கிடையாது. நிரந்தரமாக வேலை கிடைத்ததும் அவர் தன் பெயரை மார்புச் சட்டையில் குத்தலாம். அவர் தொலைந்துபோனால் தேடுவது சுலபமாக இருக்கும்.

 

அவர் ஓர் இலங்கைப் பெண்ணாக இருக்கலாம். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீஷெல்ஸ் ஆகவும் இருக்கலாம். ஆனால் அவர் புன்னகையை பாம்பு வாலைச் சுருட்டுவதுபோல பட்டென்று சுருட்டி முடித்தபோது இலங்கைப் பெண்ணாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என்று என்னை நினைக்கவைத்தது. ‘ஒரு காசோலை வந்திருக்கிறது. அதை வங்கியில் என் கணக்கில் கட்டவேண்டும்’ என்றேன். ‘சரி. மிக்க மகிழ்ச்சியுடன்’ என்று சொன்னார். உடன் அட்டையை மெசினுள் நுழைத்து, என் கடவு எண்ணையும் பதிந்த பின்னர் காசோலையை நீட்டினேன். அதைப் பெற்றவர் பல்வைத்தியருக்கு தலையை உயர்த்துவதுபோல உயர்த்தி காசோலையை மேலே நீட்டிப் பிடித்து ஆராய்ந்தார். அதன் பின் பக்கத்தில் கையொப்பம் வைக்கச் சொன்னார். வைத்தேன். கம்புயூட்டரில் விரல்களால் வேகமாக அடித்தார். நகங்களில் பொய் நகம் ஓட்டி நீட்டியிருப்பதால் விரல்களால் குத்தாமல் சாய்த்துவைத்து பதிந்தார். பின்னர் எழுந்து நின்று சறுக்குவதுபோல நகர்ந்து மேலாளரிடம் சென்று ஏதோ ஆலோசனை கேட்டர். மறுபடியும் இருக்கைக்கு திரும்பி சாவதானமாக உட்கார்ந்து புன்சிரிப்பையும் ரசீதையும் தந்தார்.

 

நான் நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டேன். நடக்கும்போதே ரசீதைப் பார்த்தேன். என்னுடைய வங்கிக்கணக்கு பத்து மடங்கு பெருகியிருந்தது. நான் கொடுத்த காசோலை 2500 டொலர்கள் மட்டுமே. அவர் வரவு வைத்தது 25,001 டொலர்கள். காசோலையில் குறுக்காக இழுத்த கோட்டை ஒரு தானம் என நினைத்து 25,001 டொலரை கணக்கில் சேர்த்திருந்தார். திரும்பவும் அவரிடம் போனேன். குனிந்த தலையை நிமிர்த்தாமல் கண்களை மட்டும் தூக்கிப் பார்த்தார். ’இன்று என்னை மிகவும் சந்தோசப்படுத்திவிட்டீர்கள்’ என்றேன். ரசீத்தைப் பார்த்த பின்னரும் அவருக்கு விசயம் புரியவில்லை. பிழையை சுட்டிக் காட்டினேன். பள்ளிச் சிறுமி செய்வது போல நாக்கை ஒருகணம் வெளியே நீட்டி உள்ளே இழுத்து தன்னைத்தானே கடிந்து கொண்டார்.

 

பிழையை விறுவிறுவென்று திருத்தி புதிய ரசீது ஒன்றை தந்தபோது ’மன்னிக்கவும்’ என்றார். ‘நான் ஏன் மன்னிக்கவேண்டும். நன்றியல்லவா சொல்லவேண்டும்’ என்றேன். அவர் ஒன்றுமே சொல்லாமல் அழகாகச் செதுக்கப்பட்ட புருவத்தை, அதற்கும் ஏதாவது வேலை கொடுக்கவேண்டுமே என்பதுபோல  உயர்த்தினார். ’இன்று நான் பணக்காரனாகியிருந்தேன். ஒரு நிமிடம் மட்டுமே என்றாலும் பணக்காரன் பணக்காரன்தானே’ என்றேன். அவர் மறுபடியும் சிரித்தார். 25,001 டொலர் பெறுமதியான புன்னகை.

 

END 

 

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta